Friday, December 5, 2008

ஷேர் மார்க்கட்டும் நானும்

இலக்கிய நண்பர்கள் எப்போதும் எனக்கு ஏராளம். எண்பதுகளில் கோவையில் ஒரு கோஷ்டிக்கு,புதிதாக தொழில் தொடங்கவேண்டும் என்று ஒரு பேரார்வம் தோன்றியது. கம்யூனிஸ்ட் மற்றும் தி.க அனுதாபிகள்; எல்லோரும் கவிஞர்கள், எழுத்தாளர்கள். முன்னணியில் ஒரு நாலு பேர்- இயக்குனர்கள் . பப்ளிக் லிமிடட் கம்பெனி. பங்குகள் விற்றார்கள். என்னை போல், இஞ்சினீயர் கந்தசாமி போன்றவர்கள் எல்லாம் அப்போது ஆளுக்கு 5,000 போட்டோம். எங்கள் உயிர் நண்பரும் பொலம்பல் பொங்கியண்ணன் என்று அன்பாக அழைக்கப்பட்ட வக்கீல் பாலு தன் தோட்டத்தையெல்லாம் விற்று பெரும் பங்குகள் வாங்கி இயக்குனரானார்.

என்ன தொழில் என்று சொல்லவேயில்லையே. ஊசி மருந்தை அடைப்பார்கள் அல்லவா , ஒரு சிறிய கண்ணாடி ஆம்பியூல், அதை தயாரிப்பதுதான். தென்னாட்டிலேயே எங்கும் அது தயாரிக்கப்படவில்லை என்று சர்வேய் முடிவுகள் தெரிவித்ததனால் எல்லோரும் உற்சாக்மாக இருந்தனர். அரசு நிறுவனமான டிக்கில் 10 லட்சம் லோன் கிடைத்தது.
கவிஞர்கள் இளையவனும் பாதசாரியும் வேனிலும் தலைமை பொறுப்பு எடுத்துக்கொண்டனர்.

இலக்கிய பெரும் தலைகள் கலந்து கொண்ட அற்புதமான திறப்பு விழா. இயந்திரத்தை இயக்குவதற்க்கென்றே, கல்கத்தாவிலிருந்து ஒரு முதியவரை கொண்டு வந்திருந்தனர். அவர் என் அபிமான இந்தி பாடகர்களில் ஒருவரான மன்னாடேயின் உறவினர் என்றவுடன் எனக்கு அவர் மேல் தனி பாசம் பொங்கி விட்டது. என் இந்தியை கூர் தீட்ட ஒரு ஆளும் வேண்டுமில்லையா! என் நண்பர்கள் நிறைய பேர் பங்குகள் வாங்கினர். இயக்குனர்களும் பெரும் கடன் வான்கியிருந்தனர்.

ஆர்டர்களுக்காக அலைந்தனர், திரிந்தனர். ஒன்றும் தேறவில்லை . இயந்திரமும் இயக்க வந்தவரும் வெட்டியாக உறங்கினர் . தொழிற்சாலையில், எப்போதும் இலக்கிய/ அரசியல் சர்ச்சைகள், வடையும், பீரும், டீயும் சிகரெட்டும் கரைந்தன.

கடன்கள் அடைக்கபடவில்லை. மூடுவிழா நடந்தது. டிக் வழக்கு தொடர்ந்து இயந்திரத்தை பறிமுதல் செய்தது. பாக்கி தொகைக்காக வழக்கும் நடந்தது. தோழர்கள் உடைந்து சிதறிப்போனார்கள்.

இவர்களுக்காக வழக்கை நடத்தியவர், இளையவனின் உறவினரும் என் வகுப்பு தோழருமான ஒருவர். டிக்கின் சட்ட அதிகாரியும் என் வகுப்பு தோழிதான். காலம் எல்லோரையும் புரட்டி போட்டது. 'பள்ளிக்கூடம்' படத்தில் வருவது போல் இவர்கள் என்ன ஆனார்கள்?

பாதசாரியின் திருமணம் முறிந்து, மன நிலை பாதிக்கப்பட்டு, பின்னர் 'காசி' என்ற அற்புதமான சிறுகதையை எழுதினார். இரண்டாவது திருமணம் நடந்து பொறுப்புள்ள கணவனாக இப்போது ஏதோ ஒரு சிறிய பத்திரிகையில் நிருபராக இருக்கிறார். கவிதைகள் எழுதுவதை நிறுத்திவிட்டார்.

வேனில் அடிபட்டு உதைபட்டு இப்போது ஒரு அச்சகம் நடத்துகிறார். ஏராளமான கவிஞர்களுக்கு கடனுக்கு புத்தகம் அடித்து கொடுத்துவிட்டு, அவர்கள் இவருக்கு போட்ட நாமத்துடன் உலா வருகிறார்.

பாலு, வக்கீல் தொழிலை விட்டு சட்ட அதிகாரியாக வேலைக்கு போனார். சம்பாதித்த பணத்தில் திடீரென்று எங்காவது நிலம் வாங்குவார். வேலையை ராஜினாமா செய்துவிட்டு விவசாயம் செய்வார். நஷ்டம் ஏற்பட்டவுடன் மீண்டும் வேலைக்கு போவார். இப்போது மாதம் ஒரு லட்சம் சம்பளத்தில் ஒரு பெரிய கம்பெனியில் கூலிக்கு மாரடிப்பதாக சொல்லிக்கொள்வார். கந்தசாமி, இப்போது உள்ளூர் டாட்டா பிராஜெக்ட்ஸின் தலைமை மேலாளர். நான் மட்டும் அப்படியே இருக்கிறேன்.

அடடா, ஒருவரை விட்டுவிட்டேனே! எம்.எல்.அனுதாபியான இனியவன் குடும்பத்தை விட்டு எங்கோ போய்விட்டார். அலைந்து திரிந்து காஷாயத்துடன் திரும்பி வந்தார். ஜோதிடம், நாடி என்று ஏதோ செய்துவந்தார். திடீரென்று ஒரு நாள் முழு நீள சாமியாராக மாறிவிட்டார் . அவர் மனைவியும் மாதாஜியாக மாற, ஒரே மகன் இளைய பட்டமாக, ஒரு பீடத்தை அமைத்துவிட்டார். பெரும் செல்வந்தர்கள் அவர் பக்தர்கள். ஒரு கோவிலையும் கட்டி, யோகா வகுப்புகளும் நடத்தி ஒரு லெவெலுக்கு வந்துவிட்டார். ஆனால் ஜக்கிக்கு அடித்த அளவிற்க்கு அதிர்ஷ்டம் அடிக்காததால், குடத்திலிட்ட விளக்காக திகழ்கிறார் எங்கள் லோகல் ஜகத்குரு!

Oct 07

3 comments:

marabin maindan said...

aanmeegathai nambaadhavar adirshtathai nambuvadhu vithyaasamaaga mattum alla-visithiramaagavum irukirathu

ஜீவா ஓவியக்கூடம் said...

அய்யய்யோ , முத்தையா இதை படிப்பார் என்று எதிர்பார்க்கவே இல்லை.!

marabin maindan said...

ethirpaaraathadhai ethirpaarungal