Friday, December 5, 2008

ஒரே ஆள்


என்னிடம் அடி வாங்கிய ஒரே ஆள் (சூபர் தலைப்பு)

நான் கல்லூரியில் படிக்கும் காலத்து ஒரு முறை சொந்த ஊரான பூதப்பாண்டிக்கு போயிருந்தபோது,எஙள்ள் கடை வேலைக்காக என்னுடன் ஒரு தச்சு ஆசாரியை அனுப்பி வைத்தார்கள். அவன் அய்யப்பன். என்னை விட நாலைந்து வயது பெரியவன். அட்டை கருப்பு. ப்ரூஸ் லீயை போல் உடல் வாகு. என்னை அண்ணா என்றுதான் அழைப்பான். நானும் அவ்வாறுதான் அழைப்பேன். கொஞ்ச நாள் ஒழுங்காக இருந்தான். குடிக்க ஆரம்பித்தான். என் தந்தை இறந்தவுடன், பயம் விட்டு போய், அதிகமாக ஆட ஆரம்பித்துவிட்டான். எங்களுக்கோ வேறு வழியில்லை. தொழிலை ஒழுங்காக நடத்தவேண்டும் என்ற பயத்தில் இருக்கும்போது, இது வேறு பிரச்சினை. முக்கியமான வேலைகள் இருக்கும்போது முழு போதையில் வந்து அட்டகாசம் செய்வான். இதில் பெண் தொடர்புகள் வேறு. அம்மா மகள் என்று இரன்டு பேருடன் ஜாலி. சரி கல்யாணம் செய்து வைக்க அவன் உறவினர்கள் முடிவு செய்து ஒரு அப்பாவி பெண்ணையும் குமரி மாவட்டத்திலிருந்து கொண்டு வந்தனர். இந்த திருந்தாத கேஸ் , மேலும் ஆட்டம் போட்டது. தீபாவளி போன்ற சமயங்களில் எல்லா தியேட்டர்களிலும் ஒரே நேரத்தில் படம் மாற்றுவதால், எஙளுக்கு கடும் வேலைகள் இருக்கும். பேனர்கள், கட் அவுட்களை நிறுவ வேன்டும். அந்த சமயத்தில் முக்கியமான ஒரு பணியாள் , முழு போதையில் சாக்கடையில் கிடந்தால் எனக்கு எப்படி இருக்கும்?

மணி என்ற ஒரு சிறுவன், பத்தாம் கிளாஸ் பெயிலாகி, பல அட்டம்ப்டுகள் அடித்து என்னிடம் ஓவியப்பயிற்சி பெற்று வந்தான். மலையாளி, மிகவும் ஏழை. சென்னை ஓவியக்கல்லூரியில் அவனை சேர்க்கவேண்டும் என்பது எங்களை போன்றவர்களின் ஆசை. அவனை இவனுக்கு ஏனோ பிடிக்காது. 'எடா கஞ்சி ' என்றுதான் அழைப்பான். ஒரு நாள் நான் வரைந்துகொண்டிருந்தேன். போதையுடன் அய்யப்பன் இன்னொரு கொட்டகையில் கத்திக்கொண்டிருந்தான். மணியை ஒரு வேலையாய் அங்கு அனுப்பினேன். திடீரென்று ஒரு மரணக்கூச்சல்..மணியிடமிருந்து. அய்யப்பனின் சத்தம் வேறு. எல்லோரும் பதறி ஓடினோம், என் கையில் தூரிகை .

அங்கு கண்ட காட்சி. மணி படுத்து கிடக்கிறான். அவன் வயிற்றின்மீது அமர்ந்திருக்கிறான் அய்யப்பன். கையில் ரம்பம். அதைக்கொண்டு சிறுவனின் கழுத்தில் வைத்து அறுக்கும் முயற்ச்சி. ஒரே களேபரம். எனக்கு கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. தூரிகையை வீசினேன். 'டேய்' என்று அலறினேன். சன்னதம் வந்தது போல் அந்த ப்ரூஸ் லீயின் முடியை கொற்றாகப்பற்றி தூக்கி, விட்டேன் ஒரு குத்து. பத்தடி பறந்து விழுந்தான் அய்யப்பன். என் வாழ்க்கையில் முதலும் கடைசியுமாக நான் ஒரு மனிதனை அடித்த அடி!

அதற்கு பின் அய்யப்பன் கொஞம் அடங்கினான். குடித்திருக்கும்போது மட்டும் என்னிடம் 'அந்த மலையாளத்துக்காரனுக்காக என்னை அடித்துவிட்டீர்களே' என்று புலம்புவான். ஒரு ஏழெட்டு வருடங்களுக்கு பிறகு, ஒரு நாள் ரம்மில் பாலிடாலை கலந்து குடித்துவிட்டான். என் தந்தைக்கு கொள்ளி வைக்க மறுத்த 'பகுத்தறிவுவாதியான' நான், ஊரிலிருந்து உறவினர்கள் வர தாமதமானதால், இவன் உடலுக்கு கொள்ளி வைத்தேன் .

சரி, மணி என்ன ஆனான்.. கடும் சிரமங்களுக்கிடையே சென்னை ஓவியக்கல்லுரியில் படித்து,திரையுலகில் இப்போது ஒரு புகழ் பெற்ற கலை இயக்குனராக திகழ்கிறான். 'அதர்மம்' தொடங்கி 'தில்', 'தூள்', கில்லி' போன்ற படங்களின் டைட்டில்களில் மணிராஜ் என்ற பெயரை பார்க்கலாம்.

Aug 07

No comments: