Friday, December 5, 2008

அன்புக்கடி

வேலு என் இனிய நண்பர்(பெயரை மாற்றி விட்டேன்). சிறு வயது முதல் எங்களை இணைத்தவர் சிவாஜி . நான் மிதவாதி. படம் பார்ப்பதோடு சரி. ஆனால் அவர் மன்ற மறவர். மாவட்ட அளவில் மன்ற பதவிகள் வகித்தவர். திருமணம் நிச்சயமானவுடன் சிவாஜிக்கு பத்திரிகை கொடுத்தே ஆகவேன்டும் என்று சென்னைக்கு கிளம்பியவர். நானும் கூட போனேன். அது தனிக்கதை.

வேலு ஒரு முன்கோபி. எவருடனும் சட்டென்று சன்டைக்கு கிளம்பி விடுவார். கை சில சமயம் நீண்டுவிடும். இவருக்கு பெண் கொடுத்தவர் ஒரு அரசு உயர் அதிகாரி. மிகவும் படித்த குடும்பம். திருமணத்தன்று முதலே இவருக்கும் மாமனாருக்கும் ஏதோ ஈகோ பிரச்சனை. நம்ம ஆள் அடிக்கடி உறுமிக்கொண்டு இருப்பார். மனைவி கருவுற்றார். ஒரு பிரபல மருத்துவமனையில் அழகிய மகன் பிறந்தான்.

அடுத்த நாள் , கோர்ட்டிலிருந்து திரும்பியிருந்தேன். வேலுவின் தம்பியும் மானேஜரும் ஓடி வந்தனர்- 'பி 2 ஸ்டேஷனுக்கு உடனே வாருங்கள், அண்ணன் உள்ளே இருக்கிறார், வெளியே எடுக்கணும்'. ஸ்டேஷனில் லாக்கப் அறையில் எனது இனிய நண்பன்! சட்டை கிழிந்திருக்க, மேலே ரத்தத்துளிகள்! அதிர்ந்து திரும்பினேன். ஒரு பென்ச்சில் மாமனார். அதே கிழிசல் சட்டை, ரத்தம், ஆனாலும் அதிகமாக, கை காலெல்லாம் காயங்கள். விசாரித்ததில் தெரிந்தது, மருத்துவமனையில் ஏதோ அற்ப காரணங்களுக்காக வாக்குவாதம் ஆரம்பித்து வார்தை தடிக்க, நம்ம ஆள் அவர் வேலையை காட்டிவிட்டார். உயர் அதிகாரி மாமனாரோ தன் பல்லை ஆயுத்மாக பயன்படுத்தி மருமகனை அன்புக்கடி கடிக்க, இளமை முறுக்கு மாப்பிள்ளை பதிலுக்கு மாமனாரின் பொன்மேனியில் ஆங்காங்கே பல் பதிக்க, கட்டில், தொட்டில் எல்லாம் பறக்க, மருத்துவமனையிலிருந்து இவர்களுக்கு கல்தா கொடுத்துவிட்டனர். மாமனார் தரப்பு போலீசில் மருமகன் மேல் புகார் கொடுக்க, கிளைமாக்சில் நான் என் சக வக்கீல்கள் சகிதம் ஆஜராகும் அரிய காட்சி.

ஆய்வாளருடன் பேசினேன் 'சார், குடும்ப பிரச்சினை, இண்ணைக்கி அடிச்சுக்குவாங்க, நாளக்கி சேர்ந்துக்குவாங்க , பைசல் பண்ணி அனுப்பிடுங்க'. புகாரை வாபஸ் பெற்றுக்கொண்டால் துரத்திவிட அவரும் தயார்தான். மாமனார் தரப்பு விடுவதாயில்லை. ரத்தக்காயங்கள் அவர்களை உசுப்பேத்திவிட்டன. என்னையும் சபிக்க தொடங்கினர். சரி, கடைசி அஸ்திரத்தை எடுத்தேன். இன்னொரு புகார் தயாரித்தேன். கதையை அப்படியே உல்டா செய்து , மாமனாரை வில்லனாக சித்தரித்த புதிய திரைக் கதை..'நீங்களும் புகார் கொடுங்க, நாங்களும் கொடுக்கிறோம், எல்லோரும் கோர்ட்டுக்கு வந்துதானெ ஆகணும், அப்ப காட்டுறோம் எங்க வேலையை' என்று சவால் (சவடால்) விட்டேன். எல்லோரும் கூடிப்பேசினர். புகார்கள் வாபஸ் ஆயின. எல்லோரும் கலைந்து போக, ஒரு பைசா வருமானமில்லாத இந்த கேஸ் தொலைந்ததே என்று காவலர்கள் பெருமூச்சுவிட, நாங்கள் எங்கள் வழியே திரும்பினோம். நண்பரும் நானும் உணர்ச்சிப்பெருக்கில் 2கி.மீ நடந்தே எங்கள் கடைக்கு வந்தோம். கிழிந்த சட்டை, ரத்தத்துடன் வந்த அவரை பார்த்து எல்லோரும் திகைத்து நிற்க, அவர் சாவகாசமாக ஒரு குண்டூசி கேட்டார். இது யாரை குத்த என்று யோசித்துக்கொண்டே ஒரு பின்டாக்ஸ் ஆணி கொடுத்தேன். பல்லிடுக்கில் நுழைத்து தோண்டி துருவி, ஒரு பெரும் இறைச்சி போன்ற துணுக்கை வெளியெ எடுத்தார்.

அது மாமனாரின் சதைத்துணுக்கு! அடப்பாவி நரமாமிசபிரியா என்று அலறியது ஒன்றுதான் பாக்கி.

பஞ்சாயத்தும் நாங்கள்தான் செய்து, ஒரு வருடம் கழித்து பிரிந்த தம்பதிகளை சேர்த்துவைத்தோம். வேலுவின் மகன் இன்று கல்லூரியில் படிக்கிறான். எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் . ஆனால் மாமனார் தரப்பு இன்றும் கடுப்புடன் என்னை பார்க்கிறது . என்ன கொடுமை சார் இது!

July 07

No comments: