
வாழ்க்கையில் நிறைய பேரை கடந்து வருகிறோம். வெகு சாதாரணமாக பார்த்த ஆட்கள், பிரபலங்களானவுடன், அட எப்படி இருந்த இவன் எப்படி ஆயிட்டான் என்று பெருமூச்சு விடுவதில்லையா, நம் எல்லோருக்கும் இந்த அனுபவம் இருக்கும், அப்படி சில பேரை சொல்லட்டுமா?
கோவை அரசு கலை கல்லூரியில் சீனியர் ஒருவர், எப்போதும் கல்லூரி மதில் சுவர் மேலே அமர்ந்திருப்பார். படு ரகளை பார்ட்டி. ஒரு முறை கல்லூரி மாணவர்களுக்கும் ரயில்வே தொழிலாளர்களுக்கும் நடந்த கலவரத்தில், சம்பந்தமில்லாமல் ஒரு கோஷ்டி அக்கம் பக்கத்து ஹோட்டல்களிலிருந்து ஜாம் டின்கள், பிஸ்கட் ஜாடிகள் போன்ற அரிய பொருட்களை 'களவாடி ஓடிய அரிய பொழுதுகள்'..மற்றும் பல நிகழ்வுகளில் இந்த மாணவர் இருப்பதை பார்த்திருக்கிறேன். பெரிய இடத்து பிள்ளை.தந்தை சுத்த தமிழ் இனிஷியல் போட்ட பிரபல டாக்டர். இலங்கை வானொலியில் அடிக்கடி ஒலிபரப்பாகும் 'வசந்த மாளிகை' வசனத்தை நண்பர்களிடம் உரத்த குரலில் முழங்குவதுண்டு .
நான் பிறகு சென்னையில் படிக்கும்போது, மதியம் கலைவாணர் அரங்குக்கு அடிக்கடி படம் பார்க்க போவேன். குறைந்த கட்டணம், 'யாருக்காக அழுதான்', 'திக்கற்ற பார்வதி' போன்ற தரமான படங்கள், தியேட்டரில் யாருமே இருக்க மாட்டார்கள். அப்போது இந்த நபரை அங்கு அடிக்கடி பார்ப்பேன். பேச்சுவார்த்தை இல்லை. பிறகு ஒரு நாள் ஒரு கமல் படத்தில் இவரை வில்லனாக பார்த்தேன். அட, சென்னைக்கு இதுக்குத்தான் வந்தீரா என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டேன். கொஞ்ச காலம் கழித்து, இவர் கோவையில் எங்கள் கடையில் ஒரு கட் அவுட்டுக்கு ஆர்டர் கொடுத்திருக்கிறர். அதாவது சொந்த ஊரில் ஒரு பெரிய கட் அவுட் வைத்து, மாலையெல்லாம் போட்டு பார்ப்பதில் ஒரு சந்தோஷம். படம் பெயர் 'அவசரக்காரி'. படம் ஊத்தல். கட் அவுட் செய்தவர்கள், போஸ்டர் ஒட்டியவர்கள் அனைவருக்கும் நோ பேமெண்ட். யாராவது அந்த ஏரியாவில் இருந்தால்தானே! ரொம்ப வருடங்கள் கழித்து ஒரு பேட்டியில் கூட அவர் இதை மறைக்காமல் தெரிவித்திருந்தார்.
அன்றைய ரங்கராஜ், இன்றைய சத்யராஜ்!
Jul 07
No comments:
Post a Comment