Friday, December 5, 2008

அக்னிபுத்திரன்


என் லட்சியமான சினிமா ஆசையை, என் தம்பியின் மீது திணித்த கதை இது. என் தந்தை இறக்கும்போது அவன் எட்டாவதுதான் படித்துக்கொண்டிருந்தான். தந்தையோடு கல்வி போகும் என்ற பழமொழியை பொய்யாக்க விரும்பினேன். +2 முடித்தவுடன் திரைப்படக்கல்லூரிக்கு விண்ணப்பித்தோம். எங்கள் குடும்பத்தில் பலத்த எதிர்ப்பு. ஏற்கனவே அவனுக்கு எனக்கு தெரிந்த காமெரா நுட்பங்களில் பயிற்ச்சி கொடுத்திருந்தேன். ஒளிப்பதிவாளருக்கான நேர்முகத்தேர்வுக்கு அவனுடன் நான் செல்லமுடியாததால் எங்கள் அத்தான் துணைக்கு சென்றார். சிறப்பாக அதையும் முடித்தவுடன், அங்கிருந்த ஒரு மாணவன் என் அத்தானை அணுகி, 'வாருங்கள், ஒருவரிடம் அழைத்து போகிறேன், அவர் நினைத்தால் உங்களுக்கு சீட் நிச்சயம்' என்று கூற, இந்த அப்பாவியும் போயிருக்கிறார். அந்த பெரிய மனிதர் (மறைந்துவிட்டார்) ஒரு தலை சிறந்த பேச்சாளர், எல்லா கட்சிக்கும் போய் வந்த அரசியல்வாதி, ஒரு வாரப்பத்திரிகையின் ஆசிரியர். யூகித்திருப்பீர்களே! போனவுடன் பல ஆயிரங்களை கேட்டார் . பணிவுடன் மறுத்துவிட்டு வந்துவிட்டது எங்கள் தரப்பு. ரேன்க் படி என் தம்பிக்கு தேர்வு வரிசையில் முதலிடம் கிடைத்தது. கல்லூரியில் சேர்த்துவிட்டோம். சில நாட்களுக்கு பிறகு 17 வயதேயான அவனுக்கு மிரட்டல்கள் வரத்தொடங்கின. நாங்கள்தான் இந்த சீட்டை ஏற்பாடு செய்தோம் , மரியாதையாக பணத்தை கொடுக்காவிட்டால் நடப்பதே வேறு என்ற ரீதியில் சிலர் மிரட்ட தொடங்கினார். இதை கேட்டு நான் பெரிதும் கலங்கினேன். எனக்கு யாரை தெரியும் , சில கம்யூனிஸ்ட் தோழர்களைத்தவிர? அவர்களால் நிச்சயம் இந்த விஷயத்தில் உதவ முடியாது.

இந்த சமயத்தில் ஆபத்பாந்தவனாக வந்தார் என் தடாலடி நண்பர் இரவிச்சந்திரன். நேராக சென்னைக்கு போனோம். அந்த நபர் ஆசிரியராக இருந்த பத்திரிகை அதிபரை நேரில் சென்று பார்த்தோம். எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகன் அப்புதான் அவர்! முறையிட்டார் இரவி. தொலைபேசியில் உத்தரவுகள் பறந்தன. அன்றிலிருந்து சங்கு மவுனமாகியது. என் தம்பி பிறகு தங்க பதக்கத்துடன் வெளியே வந்தான்.

நண்பர் வேலு ஒரு திரைப்பட வினியோகஸ்தர் என்பதை சொல்ல மறந்துவிட்டேன். அவருடன் சமயம் கிடைக்கும்போதெல்லாம் சென்னை போவேன். பிரசாத் ஸ்டுடியோவில் நிறைய நண்பர்கள் கிடைத்தனர். அங்குள்ள பிரீவியூ தியேட்டரில் அமர்ந்து ரஷ்களும், சில சமயம் பின்னணி இசையில்லாமல் முழுப்படமும் பார்துக்கொண்டிருப்போம். யாரும் ஒன்றும் சொல்லமாட்டார்கள். ஒருமுறை 'அக்னிபுத்திரன்' என்ற திரைப்படத்தின் ரஷ்கள் ஓடிக்கொண்டிருந்தன. கார்த்திக் நடித்திருந்தார். ஒளிப்பதிவு அற்புதமாக இருந்தது. பக்கத்தில் இருந்தவர்தான் ஒளிப்பதிவாளர் என்றும், இது அவருடைய முதல் படம் என்றும் என் நண்பர் சொன்னார். பிரசாத்தில் இருந்து அமெரிக்கா சென்று ஸ்டெடிகாம் பயிற்சி எடுத்தவர், பிரபல பாடகியின் மகன் என்றும் பெயர் ராஜீவ் மேனன் என்றும் அறிந்தேன்.

அவருடன் உடனே அறிமுகம் செய்து கொண்டு அறுத்து தள்ளிவிட்டேன். எல்லாம் உலக சினிமா விஷயங்கள்தான். தம்பியையும் அறிமுகம் செய்து வைத்தேன். அப்துல் ரகுமானிடம் உதவியாளராக இருக்கிறான் என்றவுடன் ஆதரவாக பேசி, எஙளுக்கு அவருடைய பியட் காரில் ஏ.வி.எம். வரை லிப்டும் தந்தார்.

ஆண்டுகள் கடந்தன. பின்னர் என் தம்பி மேனன், மற்றும் அவர் மனைவி இயக்கிய நிறைய விளம்பரப்படங்களுக்கு பணியாற்றி கொண்டிருக்கிறேன் . ஒரு நாள் அவனிடம் கேட்டேன் , உனக்கு அவரை அறிமுகம் செய்தது யார், நினைவிருக்கிறதா?
விழிக்கிறான், பாவம் மறந்து போச்சு.

பி.கு.இலங்கை தமிழர்களால் தயாரிக்கப்பட்ட அக்னிபுத்திரன் படம் பாதியிலேயே நின்று போய்விட்டது.

July 07


No comments: