Friday, December 5, 2008

ரகசிய ஓவியன்

இப்போது கருத்தில் எனக்கு வைத்திருக்கும் ஓவியப்போட்டியை பார்க்கும்போது, காவல் துறையுடன் எனக்கு இருந்த ஓவியத்தொடர்பு நினைவுக்கு வருகிறது. 22 வயது எனக்கு. அப்போது அரசாங்கமே பொருட்காட்சிகளை நடத்தும் புதிய முறை அமுலுக்கு வந்தது. காவல் துறை வழக்கம் போல ஒரு ஸ்டால் அமைக்கிறது. அப்போது புதிய மாவட்ட காவல் அதிகாரியாக நியமிக்கப்பட்டவர் கல்லூரியில் ஆசிரியராக வேலை பார்த்தவர். புதுமையாக ஏதாவது செய்ய ஆசைப்பட்டார். கோவை நகரில் ஓவிய நிறுவனம் நடத்தும் அத்தனை பேரையும் அழைக்க உத்தரவிட்டார். என் தந்தையோ கூச்ச சுபாவி. போலீஸ் என்றவுடன் ஒரு பயம். நைசாக என்னை தள்ளிவிட்டார்.
'படிச்சிருக்கையில்லே, போய் இங்க்லீஷ் பேசி சமாளி , இதுக்கெல்லாம் நீதான் போணும்' என்றர். நான் அதை விட பயந்தாங்கொள்ளி . வேறு வழியில்லாமல் போனேன்.

அதிகாரி அறையில் நாங்கள். எல்லோரும் தொழிற்துறை ஓவிய ஜாம்பவான்கள். நானோ கல்லூரியிலுருந்து வெளி வந்திருக்கும் ஒரு பச்சா. காவல்துறைக்கும் பொதுமக்களுக்கும் உள்ள நட்புறவை சித்தரிப்பது போல் ஸ்டால் அமைய வேண்டும் , உடனே கருத்துக்களை சொல்லுங்கள் என்றார். எல்லோரும் பேய் முழி முழித்துக்கொண்டிருந்தனர். ஒரு படத்தை பிரதி எடுத்து கொடுப்பதில் வல்லவர்களுக்கு, சுயமாக ஆலோசனை சொல்வதில் சிக்கல்...எனக்குள் இருந்த வீர இளைஞன் விழித்துக்கொண்டான்.

'சார், ஒரு பேப்பர் கொடுங்க' என்றேன்.
சர சர என்று ஒரு ஸ்கெட்ச்..ஸ்டாலின் முகப்பை வரைந்து, நுழைவாசலுக்கு மேல் இரன்டு உருவங்கள் கை குலுக்குகின்றன. ஒரு போலீஸ்காரனும் ஒரு பொதுஜனமும்..கைகளுக்கு கீழே மக்கள் நுழையும் வழி. வெகு சாதாரண ஐடியா, ஆனால் நான் வரைந்த விதமும் வேகமும் அதிகாரியை கவர்ந்திருக்க வேண்டும். 'இந்த பையந்தான் இந்த ஸ்டாலை செய்யப்போகிறான். மற்ற அனைவரும் போகலாம்' என்றர்.

அந்த இனிமையான, தலையில் நிறைய முடியுடைய அதிகாரிதான் தார்குண்டே, கலைஞர், தெஹல்கி புகழ் முகம்மது அலியாக பின்னாளில் உருவெடுப்பார் என்று சத்தியமாக தெரியாது.

ஒரு பத்து ஆண்டுகளுக்கு, அதாவது கணிணியில் புகைப்படங்களை தொகுக்கும் காலம் வரை, எங்கள் மாவட்டத்தில் அடையாளம் தெரியாத குற்றவாளிகளை பிடிக்க ஒரு சினிமா பாணி உத்தியை கடைப்பிடித்தார்கள். சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிகளை என்னிடம் அழைத்து வருவார்கள். அவர்களிடம் விசாரித்து அந்த உருவத்தை அப்படியே கற்பனையில் வரைந்து கொடுப்பேன். இதை வைத்து அசல் குற்றவாளிகளையும் பிடித்தனர். ஒரு கட்டத்தில் இது எனக்கும் என் சீனியர் வக்கீலுக்கும் பெரிய தலைவலியாக மாறியது , நல்ல வேளை, கணிப்பொறியில் முகத்தின் பல பாகங்களை இணைத்து ஒரு புதிய வடிவம் கிடைக்க செய்யும் மென்பொருளை காவல் துறை இணைத்தது.

August 07