Friday, December 5, 2008

இன்குலாப் ஜிந்தாபாத்

'பொலம்பல் பொங்கியண்ணன்' என்று நெருங்கிய நண்பர்களால் (!) அன்பாக அழைக்கப்பட்ட்ட என் நண்பர் பாலு ஒரு மார்வாடிக்காக ஒரு வழக்கில் ஆஜரானார். கேரளாவில் ஓடிக்கொண்டிருந்த ஒரு ரூட் பஸ்ஸிற்கு கடன் கொடுத்திருந்தான் மார்வாடி. ஒரு பைசா கடனும் வட்டியும் வரவில்லை. பஸ்ஸை வேறு கை மாற்றியும் விட்டனர். கோவை கோர்ட்டில் வண்டியை பறிமுதல் செய்ய உத்தரவு ஆகியது. நீதிபதியின் சார்பாக ஒரு கமிஷனர் நியமிக்கபட்டு வண்டியை ஜப்தி செய்யும் அதிகாரமும் அவருக்கு வழங்கப்பட்டது . எங்கள் நண்பர் 'மாமாஜி'தான் கமிஷனர். கொச்சிக்கு புறப்பட்டோம் அனைவரும். வழக்கம் போல் வெட்டி ஆபீசரான நான் துணைக்கு.தலைமை தாங்கியவர் பாலக்காட்டை சேர்ந்த வக்கீல் ஹரிஹரன்.கொச்சியில் இரண்டு குண்டர்கள் துணைக்கு.

கொச்சி போலீஸ் கமிஷனர் எங்களுடன் ஒத்துழைக்க மறுத்துவிட்டார். சட்டப்படி செய்ய வேண்டியதை செய்துகொள்ளுங்கள், நாங்கள் தலையிடமாட்டோம் என்று மட்டும் கூறினார். பஸ்ஸின் இப்போதைய உரிமையாளர்கள் மார்க்ஸிஸ்ட் யூனியனை சேர்ந்த இரண்டு டிரைவர்களும் கண்டக்டர்களும்தான். பஸ் டெர்மினஸ்ஸான கொச்சி யூனிவெர்சிடியில் பஸ்ஸை மடக்கினோம். மாமாஜி உத்தரவை காட்டினார். திகைத்துபோனவர்கள் முதலில் மறுத்தனர். அல்லது விடு ஸ்டேஷனுக்கு என்றவுடன் வண்டி கலமச்சேரி காவல் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த காவல் நிலையம் அப்போது இருந்தது ஒரு மேட்டின் மேல். ஒரே ஒரு வண்டி மட்டும் போகமுடிந்த பாதை. பஸ்ஸை அங்கு நிறுத்தியாயிற்று. ஆய்வாளருடன் பேசிக்கொன்டிருக்கும்போதே எங்கிருந்தோ வந்து சேர்ந்து விட்டனர் 50 60 சி.ஐ.டி.யூ உறுப்பினர்கள். எங்கள் காரும் பஸ்ஸும் முற்றுகையிடப்பட்டன. ஆளும் கட்சியான கம்யூனிஸ்ட்களை பகைத்துகொள்ள ஆய்வாளருக்கு என்ன பைத்தியமா? அவர் அறைக்குள் சென்றுவிட்டார். நாங்கள் திகைத்து நின்றோம். பஸ்ஸுக்குள் எங்கள் டிரைவரும் வக்கீல் உடையில் மாமாஜியும் . காருக்குள் நாங்கள். காம்பவுண்டுக்கு வெளியே ஒரே கூச்சல் . டேய் பாண்டி என்று எஙளை வாழ்த்தி முழக்கங்கள்! சில மணி நேரங்கள் அப்படியே இருந்தோம்.

அந்த நேரத்தில் வெளியிலிருந்து ஒரு போலீஸ் வேன் உள்ளே வந்தது. குறுகிய வழி என்பதால் கொஞ்சம் குழப்பம். ஆட்கள் கலைய, எங்கள் பஸ் ரிவர்ஸ் எடுக்க, அந்த வேன் உள்ளெ வர, திடீரென்று எங்கள் டிரைவர் பஸ்ஸை வெளியே கிளப்பி விட்டான். பதற்றத்துடன் ஆட்கள் விலகி ஓட, எங்கள் கார் பின் தொடர, சட சட என்று கார் தாக்கப்பட்டது. கதவுக்கு வெளியே ஆவேசமான முகங்கள், சிலீரென்று கண்ணாடி உடைந்தது. நாங்கள் பயந்து அலற, ஹரிஹரன் காரை கிளப்பி விட்டார். பெரும் கூச்சலுடன் ஆட்கள் பின் தொடர்ந்து ஓடி வந்தனர்.

தேசிய நெடுந்சாலையில் சினிமாவில் மட்டுமே நான் பார்த்து மகிழ்ந்த ஒரு கார்சேஸ். தடதடக்கும் இதயத்துடன் நாங்கள். முன்னால் பஸ், பின்னால் எங்கள் கார், எங்களை துரத்தி வரும் ஜீப்கள். எங்கள் டிரைவர் கில்லாடி. மாமாஜியை சாலக்குடியில் ஹரிஹரனுக்கு பரிச்சயமான ஒரு இடத்தில் இறக்கி விட்டு பறந்துவிட்டான். இருள் சூழ்ந்த நேரத்தில் சாலக்குடியை அடைந்தோம். காரை ஒரு சந்தில் ஒளித்துவைத்துவிட்டு, சாப்பிட்டோம். ஆம் ,காலையிலிருந்து பட்டினி. பிறகு ஒரு தியேட்டரில் இரவுக்காட்சி. எங்கள் உடமைகள் எர்ணகுளத்தில் அல்லவா இருக்கின்றன. காரை இங்கேயே நிறுத்திவிட்டு டாக்ஸியில் சென்றோம். வழியில் எந்த ஜீப்பை பார்த்தாலும் பயம். லாட்ஜில் கதவை ரூம் பாய் தட்டினாலும் நடுங்கினோம். அடுத்த நாள் பகலில் கிளம்பினோம். யாரை பார்த்தாலும், நேற்று பார்த்த முகம் போலிருக்கிறது.

வளர்ப்பானேன். அதற்க்கு பிறகு, வண்டி ஜப்தி என்றால் மரியாதையுடன் விலகி விடுவோம்.
August 07

1 comment:

K.R.அதியமான் said...

இது போன்ற விசியங்களால் தான் கேரளா உருவப்படவில்லை.

pls also try :

savekerala.blogspot.com