Friday, December 5, 2008

பொன் விலங்கு


காந்தி ஜெயந்தியை முன்னிட்டு என் மாணவர்களுக்கு ஒரு ஓவியப்போட்டி வைத்திருந்தேன். மிக சிறப்பாக வரைந்திருந்தார்கள். இவர்களை ஊக்குவிக்க ஏதாவது செய்யவேண்டுமே என்று யோசித்தபோது, முதல் மூன்று பரிசு பெற்றவர்களுக்கு வாட்டர் கலர் செட் ஒன்றும், மற்ற 9 ஆறுதல் பரிசு பெற்றவர்களுக்கு பென்சில் செட் ஒன்றும் பரிசாக கொடுக்கலாம் என்ற எண்ணம் வந்தது. அதிகாரிகளிடம் கேட்டேன். காந்தி ஜெயந்தி அன்று விழா இருக்கிறது. அன்று வைத்து கொள்வோம் என்றனர். சொல்ல மறந்துவிட்டேனே. என் மாணவர்கள் அனைவரும் கொலைக்குற்றத்திற்க்காக ஆயுள் தன்டனை பெற்ற சிறைவாசிகள். கைக்காசு போட்டு பரிசுப்பொருட்களை வாங்கிக்கொண்டு போனோம்.

சிறை விழாக்கோலம் பூண்டிருந்தது. ஒர்க் ஷாப்பில்தான் விழா. எலுமிச்சம்பழத்துடன் 'இல்லவாசிகளின்' வரவேற்பு. திடீரென்று ஒரு பெரும் கூட்டம் வந்தது. முழு சூட் உடையுடன் ஆண்களும் லிப்ஸ்டிக் பெண்களும், லயன்ஸ் , ரோட்டரி குழுவினர். மேடையில் பேனர்கள் கட்டப்பட்டன. புகைப்படக்காரர்களும் வந்தனர். சிறையில் சேவை செய்யும் பணியாளர்களுக்கும், வெளியாட்களுக்கும் 'சிறை செம்மல்'(?) விருதும் பொன்னாடையும் வழங்கும் வைபவம். யோகா, எய்ட்ஸ் விழிப்புணர்வு, இசை, நடனம் மற்றும் எல்லோரும் இந்த விருதை பெற்று சென்றுவிட்டனர். பொன்னாடைக்காக தினவெடுத்த தோள்களுடன் காத்திருந்தேன். யாரும் கூப்பிடவில்லை.

லயன்ஸ் கிளப்பினர் கொண்டுவந்திருந்த பரிசுகளை பார்த்து மலைத்து என் அவல் மூட்டை ஒளிந்துகொண்டது. பிரம்மான்டமான பிளாஸ்டிக் குப்பை வாளிகள், பக்கெட்டுகள் முன்னே என் கலர் பாக்ஸ் எந்த மூலைக்கு! குறைந்த மின்விசிறிகள் கொண்டது அந்த அரங்கம். கோட்டு போட்ட லயன்ஸ் வியர்வை மழையில் நெளிந்து கொண்டு பிளாஷ் ஒளியில் ஒரு வழியாக 'ஓட்டப்பந்தயம், தாண்டி குதித்தல்' போன்ற விளையாடு போட்டிகளுக்கு பரிசளித்துவிட்டு வியர்வையை துடைத்துவிட்டு வெளியேறிவிட்டனர். ஓவிய போட்டி பற்றி பேச்சு மூச்சே காணோம். பாவம், என்னுடைய மாணவர்கள் வெகுண்டெழுந்து வெல்பேர் ஆபீசரிடம் முறையிட்டவுடந்தான், அவர்களுக்கு நினைவே வந்தது போலும்.

பிளாஷ் வெளிச்சங்கள் இல்லாத அந்த அரங்கில் இப்போது மேடையில் நானும் அதிகாரிகளும் கீழே இல்லவாசிகள் மட்டுமே. பரிசுகளை வழங்கினேன் . எங்கிருந்தோ அவர்கள் வரைந்த ஓவியங்கள் மேடைக்கு வந்தன. டி.ஐ.ஜி, சூப்பெரின்டெண்டெண்ட், ஜைலர் அனைவரையும் பென்சிலில் அற்புதமாக வரைந்து அவர்களுக்கே பரிசளித்தனர்.
அதிகாரிகள் முகத்தில் அப்போதுதான் புன்னகை மலர்கிறது. கைதிகளின் கரகோஷம் , காலையிலிருந்து முதன் முதலாக அரங்கில் கலகலப்பு. பெருமையுடன் (பொன்னாடையில்லமலும்) வெளியெறினேன்.
'சார், சாப்பாடெல்லாம் ரெடி, எங்களோடு சாப்பிடுங்கள்' என்றனர் மாணவர்கள்.
'என்னப்பா ஸ்பெஷல் இண்ணக்கி?'
'தக்காளி சாதம்'
'அட போஙப்பா, ஜெயில்ல சிக்கன் எல்லாம் போட்ராங்கண்ணு சொன்னாங்க ?'
என்று கிண்டலடித்தேன்.
'சார், இண்ணக்கி காந்தி ஜெயந்தி'.

சாப்பிடாமல் விடைபெற்றேன்.
Sep 07

3 comments:

In Vidia said...
This comment has been removed by the author.
RAJI MUTHUKRISHNAN said...

Very nice - I am impressed by the title.

Unknown said...

Jeeva
The person you are sketching IN THE PHOTO is Dr.Prabakar, WAS my lecturer @ CIT during late 70'S. Later he became Principal and currently he is Secretary CIT.