Saturday, December 6, 2008

உபசாரம்

எங்கள் வீட்டுக்கு பின்புறம் தேவேந்திர வீதி. அவர்களுக்கென்றே ஒரு மாரியம்மன் கோவில் இருக்கிறது. மூன்று வருடங்களுக்கு ஒரு முறை பூசாரி மாறிவிடுவதுண்டு. அதில் ஒருவர் மிகவும் அடக்கமானவர். வருடாவருடம் கோவிலுக்கு பெயின்ட் அடிக்க என்னிடம் நன்கொடை வாங்குவதுண்டு. அவரிடம் பூசை முறைகளை பற்றி நான் விசாரிப்பதுண்டு. கருவறைக்குள் எல்லோரும் வரலாமா என்றவுடன் கோவித்துக்கொண்டார். ஒரு பயலை உள்ளே விடமாட்டேன், அப்புறம் நான் எதுக்கு அங்கே பூசாரி என்று பொருமினார். (கருவறைக்குள் பார்ப்பனர்கள்தாம் மற்றவரை நுழைய விடாமல் தடுக்கிறார்கள் என்று சொல்பவர்கள் கவனிக்க)

இவர் ஒரு நகராட்சி ஊழியர். மின்மயானம் அமைந்த பிறகு அங்கே வாட்ச்மேன் டியூட்டி போட்டுவிட்டார்கள். நெற்றியில் பெரிய பட்டை அடித்துக்கொண்டு சிவப்பழமாக மயானத்தில் காட்சி அளிப்பார். மயானத்திற்கு எப்போதாவது ஏதாவது சாவுக்கு நான் போனால், எனக்கு ராஜ உபசாரம் நடக்கும். எனக்கே கூச்சம் வரும் அளவிற்கு உபசரிப்பார். சுடுகாட்டில் என்னடா உபசரிப்பு என்று நீங்கள் கேட்பது புரிகிறது. அதாவது நானே ஒதுங்கி நின்றாலும் என்னை தர தர என்று இழுத்து ஸ்பெஷல் தரிசனத்திற்கு இரும்பு ஷட்டர் தாண்டி உள்ளே அழைத்து சென்று விடுவார். உற்றார் உறவினரெல்லாம் வெளியே நிற்க, சடலம் பக்கென்று பற்றிக்கொள்ளும் காட்சியை விசேஷமாக என்னை பார்க்கவைக்கிறாராம்.

இதற்காகவே நான் இப்போதெல்லாம் மயானம் செல்வதை தவிர்த்துவிடுகிறேன்.
திடீரென்று காலையில் ஒருநாள் இவரிடம் சிக்கிக்கொண்டேன்.
'என்ன சார், பாக்கவே முடியவில்லை, சுடுகாட்டுக்கும் வர்றதேயில்லை..'

கடுப்பாகி விட்டது.'
'நிச்சயமா வருவேனுங்க, எங்க செத்தாலும் ஆத்துப்பாலம் சுடுகாடுதான்னு உயிலே எழுதி வெச்சுட்டேன்'

அவருக்கு என்னவோ போலாகிவிட்டது.
எனக்கும்தான். ஒரு நல்ல மனிதரை புண் படுத்திவிட்டேனோ என்று.

2 comments:

Chithran Raghunath said...

மிக வித்தியாசமான அனுபவம்தான். சுவாரஸ்யமான பதிவு. :-)

காளி said...

எனக்கு தெரிந்தவரொருவர் ( ஆந்திரா) திரையரங்கில் வேலை பார்த்தார். ஒருமுறை ஹோட்டலில் சர்வராக இருந்தார்...ஒருமுறை தியேட்டரில் டிக்கெட் கிழித்துக்கொண்டிருந்தார். அந்த படத்தை பார்க்க வ்ந்தால் தியேட்டரில் சார் சார் இங்கே வாங்க என்பார்...வண்டியை நீறுத்தும்போது இப்படி நிறுத்துங்க சார் ...ரேய் சாருக்கு ஹெல்ப் செய்...என எனக்கு ஒரே கூச்சமாகிவிட்டது. அவர் அப்ப்டி நடந்துகொள்ளுமளவிற்கு நான் என்ன செய்தேன் என யோசித்தால் ஒன்றும் நினைவில்லை...நீங்களாவது நன்கொடை கொடுத்தீர்கள்...நான் ஒருமுறை ஒரு ஒயின்சாப் வாசலில் நின்று கொண்டு அந்த பக்கமாக சென்று கொண்ட என்னிடம் 10ரூபாய் கேட்டார்...நான் இல்லையென்று சொல்லியிருக்கிறேன்.
அது அவர்கள் நம்மீது வத்திருக்கும் அன்போ அல்லது மரியாதையோ என்னவோ அவர்களுக்கு தெரிந்த வகையில் வெளிப்படுத்துகிறார்கள்.