Friday, March 19, 2010

ரசிகன்!


உலகத்திலேயே நம் தென்னிந்தியாவை போல் சினிமா நடிகர் ரசிகர் மன்றங்கள் இவ்வளவு சுறுசுறுப்பாக செயல்படுகின்றனவா என்று தெரியாது. எவன் நடிக்க ஆரம்பித்தாலும் ஒரு ரசிகர் நற்பணி மன்ற பேனர் ஒன்று அந்த தியேட்டரில் தொங்குகிறது அவன் படத்துடன்..மற்றும் தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் ஆலோசகர் பெயர்களுடன். இப்போது பிளக்ஸ் அச்சிடும் பணியில் ஈடுபட்டு இருக்கும் என்னை போன்றவர்கள் படும் பாடு தனி கதை.இந்த துக்கடா மன்றங்களுக்கு இந்த ஆரம்ப நிலை நடிகர்களே பைனான்ஸ் செய்கிறார்கள். கொஞ்சம் வளர்ந்த நடிகர்கள் என்றால் உடனே பதிவு எண், மன்றக்கொடி போன்ற காமெடிகளுடன்..முதல் நாள் முதல் ஷோ டிக்கெட் அல்லது சிறப்பு காட்சிகளோ உண்டு. பிளாக்கில் விற்பதுதான் இவர்களது முக்கிய சம்பாத்தியம். இப்போதெல்லாம் இவர்களுக்கு போட்டியாக ரோட்டரி சங்கங்கள் போன்ற அமைப்புக்களும் ஈடுபட்டு வருகின்றன.! விஜய், அஜீத், தனுஷ், ஜீவா போன்றவர்களிடம் எதை கண்டு இந்த ரசிகர்கள் மொய்த்து வருகின்றனர் என்றால் புரியவில்லை...சில நடிகர்களை ஜாதி அபிமானத்தோடு கொண்டாடுகின்றனர். தென் மாவட்ட திருமண பிளக்சுகளில் இப்போதெல்லாம் நாடார் வீடென்றால் சரத்குமார், தேவர் என்றால் கார்த்திக், தேவேந்திரர் என்றால் விக்ரம் & பிரசாந்த் (இருவரும் ரத்த உறவுள்ள கசின்ஸ் என்பது நிறைய பேருக்கு தெரியாது) கட்டாயமாக இடம் பெறுகின்றனர். முத்துராமலிங்க தேவரையும் கார்த்திக்கையும் பேனர்களில் ஒன்றாக பார்க்கலாம்!! முதன் முதலில் இங்கு யாருக்கு ரசிகர் மன்றங்கள் அமைந்திருக்கும்? பாகவதர் அபிமானிகளும் சின்னப்பா அபிமானிகளும் இருந்தனர்..ஆனால் மன்றங்கள் இருந்தனவா? ஒரு வேளை எம்ஜியாருக்குத்தான் ஆரம்பித்திருப்பார்களோ! தியோடர் பாஸ்கரன், வெங்கடேஷ் சக்ரவர்த்தி போன்ற ஆய்வாளர்களிடம் கூட விசாரித்தேன். ஒரு முன்னாள் கவுன்சிலரிடம் விசாரித்தபோது அவர் சொன்ன ஓர் தகவல் உபயோகமாக இருந்தது. சாமையர் புது வீதியில் பாகவதருக்கு போர்ட் மாட்டி ஒரு மன்றம் இருந்ததாகவும், பின்னர் டி .ஆர்.மகாலிங்கத்துக்கும் அதே ஏரியாவில் ஒன்று அமைக்கப்பட்டதாகவும் சொன்னார். சிவாஜியும் எம்ஜியாரும் சமகாலங்களில் மன்றம் கண்டவர்கள் என்றும் சொன்னார்.

அப்போது மன்றங்களை ரசிகர்களே அமைத்துக்கொண்டனர். நடிகர்கள் அதற்கு பைனான்ஸ் செய்ததில்லை. ரசிகர் மன்ற காட்சிகள், டிக்கட் வாங்கி பிளாக்கில் விற்பது போன்ற வியாபாரங்கள் நுழைந்தவுடன் அரசியலும் தலைமை பீடங்களும் நுழைந்தன. மன்றங்கள் அரசியல் கட்சிகளின் அங்கங்கள் ஆகவும் ஒட்டு வங்கிகளாகவும் மாறின...குறிப்பாக எம்ஜியார், சிவாஜி மன்றங்கள்! கோவையில் மதுரையை போல் எல்லா நடிகர்களுக்கும் மன்றங்கள் இருந்ததில்லை. ஜெமினி கணேசனுக்கு ஒரு மன்றம் இருந்தது.... பள்ளி சிறுவனாக இருந்தபோதே ரசிகர்களின் செயல்பாடுகளை கவனிப்பேன்..எந்த புதிய படம் வருவதாக இருந்தாலும் ரசிகர்கள் எங்கள் கடையில் திரண்டுவிடுவார்கள்...என் தந்தையிடம் படத்தின் ஸ்டில்களை காட்டும்படி கெஞ்சுவார்கள். காட்டியவுடன்..இதை வரையுங்கள், அதை வரையுங்கள் என்று ஆலோசனை தர ஆரம்பித்துவிடுவார்கள். எனக்கு கடுப்பாக இருக்கும்..அப்படி வந்த 'கவுரவம் சிவாஜி மன்ற மறவர்' வேணு என் வாழ்நாள் நண்பர் ஆகிப்போனார்!

வியட்நாம் வீடு படத்திற்கு வாட்சை விற்று ஒரு வீடு செட்டிங்க்சை வண்டியில் வைத்து ஊர்வலமாகப்போன சேகர், இன்றும் சிவாஜிக்கு பேனர் வைக்கிறார், ஒரு முழுநேர கோவில் அர்ச்சகராக இருந்தும். கணபதி சிவாஜி செல்லக்குட்டி எண்பது 'நவரச' பாடல்கள் அடங்கிய சிவாஜி சிடியை தயாரித்து தெரிந்தவர்களுக்கெல்லாம் கொடுக்கிறார். கோவை மேயர் வெங்கடாசலத்திடம் பேசிக்கொண்டிருந்தபோது சொன்ன செய்தி வியப்பாக இருந்தது. திருவிளையாடல் ரிலீசின்போது சிவன் வேடம் போட்டுக்கொண்டு கழுத்தில் பாம்புடன் ஊர்வலம் போனவர் சாட்சாத் இவர்தானாம்!! இன்னும் இது போல பல பேர். எம்ஜியார் பக்தர்கள் இன்றும் பழைய படங்களுக்கு பேனர் வைத்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடுகிறார்கள். 'உனக்காக நான்' ரிலீசின்போது ஜெமினி ரசிகர்கள் சிவாஜிக்கு இணையாக கட் அவுட் வைக்கவேண்டும் என்று தகராறு செய்தது இன்னும் மறக்க முடியாதது.
யோசித்து பார்க்கும்போது எம்ஜியார் ரசிகர்களாக இருந்தவர்கள் பின்னர் அவரது உதவியால் பெரும் பதவிகளையும் அனுபவித்தனர். சிவாஜி ரசிகர்களுக்கெல்லாம் அவர்களது கட்சியினால் எந்த பிரயோஜனமும் கிடைக்கவில்லை...கோவை குப்புசாமி, ராஜசேகரன் போன்றவர்கள் மட்டும் கொஞ்சம் அதிர்ஷ்டம் செய்தவர்கள்!! ரசிகர்களை வைத்து எம்ஜியார் கட்சி ஆரம்பித்து போன உயரத்தின் கீழ் படியை கூட சிவாஜி ரசிகர் மன்ற கட்சி தொடவில்லை..'என் தமிழ் என் மக்கள் ' என்று ஒரு டப்பா படம் எடுத்ததுதான் மிச்சம்!

நடிகர்களின் முதலமைச்சர் ஆசை இந்த ஜாம்பவான்களிடம் தொடங்கி குஞ்சு குளுவான்களுக்கேல்லாம் பரவி..இன்று ரசிகர் மன்றங்கள் எல்லாம் , தத்தம் தலைவர்களை வருங்கால முதல்வர்களாக கருதி ஆர்ப்பரிக்கின்றன. சமீப காலம் வரை கரை வேட்டிகளுடன் உலவிய விஜயகாந்த் ரசிகர்கள் இன்று சோர்ந்து போயிருக்கின்றனர்.

நான் பார்த்த கேள்விப்பட்ட ரசிகர்கள் பல வகை. கோவை தியாகி குமரன் மார்க்கெட்டில் நான் சிறுவனாக இருக்கும்போது பார்த்த காட்சி இது. அருகருகே இரண்டு வெங்காயக்கடைகள்.ஒன்றின் சுவர் முழுவதும் எம்ஜியார் படங்களின் தினத்தந்தி முழுப்பக்க விளம்பரங்கள் ஒட்டப்பட்டிருக்கும். பக்கத்து கடையில் சிவாஜி விளம்பரங்கள். வாடிக்கையாளர்கள் தத்தம் விருப்ப கடைகளில் வெங்காயம் வாங்கலாம். என் ரொம்ப நாள் சந்தேகம் இரண்டு கடைக்கும் உரிமையாளர் ஒருவர்தானோ என்று!! தங்க பட்டறைகளில் தியாகராஜ பாகவதர் படம் கட்டாயமாக மாட்டப்பட்டிருக்கும். பூதப்பாண்டி ஜீவா சிற்றுண்டி நிலையத்தின் உரிமையாளரான என் சித்தப்பா, கடை முழுவதும் சிவாஜி ஸ்டில்களையும் , காலண்டர்களையும் அலங்கரித்து வைத்திருப்பார் . பாதி நேரம் வாடிக்கையாளர்களான எம்ஜியார் ரசிகர்களுடன் சண்டை நடக்கும். தோசைகளும் ரசவடைகளும் காய்ந்து கிடக்கும். என் மூத்த நண்பர் மறைந்த பேராசிரியர் ஆறுமுகம், தன் நாகர்கோவில் வீட்டில் சிவாஜி நடித்த பெரும்பான்மையான படங்களின் வீடியோ காசட்டுகளையும் 16mm பிரதிகளையும் வைத்திருந்தார். அயல் நாடுகளிலிருந்து சேகரிப்புகள்.. அவர் சொல்வது போல சிவாஜி கத்தியால் உப்புமா கிண்டும் 'மருத நாட்டு வீரன்' போன்ற சில சாதாரண படங்களுக்கு கூட நாலைந்து பிரதிகள்! தன் அபிமான இசை அமைப்பாளர்களின் / பாடகர்களின் இசைத்தட்டுக்களை சேகரித்து வைத்து ரசித்துக்கொண்டிருக்கும் அன்பர்கள்...எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் பரம பக்தர் கோவை ரவி அவருடைய அனைத்து பாடல்களையும் சேகரித்து வைத்திருக்கிறார்! சங்கீத மேதைகளுக்கும், எழுத்தாளர்களுக்கும் பரம ரசிகர்கள் இருக்கிறார்களே. சுஜாதாவை சும்மா பார்க்கவே பெங்களூர் பயணம் செய்த கல்லூரி நண்பர்கள் இருந்திருக்கின்றனர். ஜெயமோகனை கொண்டாடுபவர்கள் இப்போது உண்டு!!

ரசிகர்களை செலுத்துவது எது...அந்த வயதா, இல்லை ஆர்வமா, தன்னை கவர்ந்த ஆளுமை மீதான பற்றா, விடை தெரியாத கேள்விகள்!

13 comments:

Chithran Raghunath said...

ரசிகர்கள் ரசிப்புத்தன்மையோடு நின்றுவிடாமல் “வெறியர்கள்” என்றாகிப் போகும்போதுதான் கஷ்டம். எனக்குத் தெரிந்த ரஜனி வெறியர்கள் இருக்கிறார்கள். அதே மாதிரி முக்கிய தலைவர்கள் இறந்துவிட்டால் கூடவே தீக்குளிக்கும் ஏழெட்டுப் பேர்களை யோசித்துப் பாருங்கள். ரசிகர்கள், அபிமானிகள், விசுவாசிகள் என்று நிறைய பெயர்கள் இருப்பதாகத் தோன்றுகிறது. நல்ல பதிவு ஜீவா!

இரா. பாலா said...

அருமை.

no-nononsense said...

ரசிகர்கள் பல விதம். அவர்களில் நம் ஊர் சினிமா ரசிகர்கள் அளவிற்கு கண்மூடித்தனமான பின்பற்றுதல் மற்ற துறை ரசிகர்களிடம் இருக்கிறது என்று சொல்லமுடியாது. எஸ்.பி.பியை ஒருவர் ரசிக்கிறார், பாடல்களை சேகரித்து வைத்திருக்கிறார் என்றால், பாடகரின் திறமை மீது கொண்ட லயிப்பாக அதனை புரிந்துகொள்ள முடிகிறது.

ஆனால் அதற்கு மாறாக நம் சினிமா ரசிகர்களோ வெற்று பிம்பங்களுக்கு மாலையணிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்திய பாணி சினிமாக்களுக்கும் மற்ற அயல்நாட்டு சினிமாக்களுக்கும் உள்ள வித்தியாசங்களைப் பட்டியலிட்டு, இந்தியச் சூழலையும் உளவியலையும் கணக்கில் கொண்டு சிந்தித்தால் இதற்கு ஓரளவு காரணம் பிடிபடும் என்று தோன்றுகிறது.

இங்கேயுள்ளது போல வேற்று தேச சினிமாக்களில் சூழ்நிலைக்கேற்ற பின்னணி பாடல்கள் கிடையாது. பஞ்ச் டயலாக் கிடையாது. ஒரே அடியில் ஒன்பது பேரை வீழ்த்தும் சூப்பர் ஹீரோயிஸம் கிடையாது. முக்கியமாக, கிட்டத்தட்ட அனைத்து படங்களிலும் ஹீரோவே இறுதியில் தீமையை அழித்து தர்மத்தை நிலைநாட்டும் ’சம்பவாமி யுகே யுகே’ கிடையாது. அதனால் அங்கேயெல்லாம் நம் ரசிகர்களைப்போல தொழல் கிடையாது. அங்கேயும் cult இருக்கலாம். ஆனால் அது வாழ்க்கையை தொலைத்துவிட்டு ‘தலைவா’ என்று திரியும் அளவிற்கு இருக்காது என்று நம்பலாம்.

இங்கே கதையை முன்னிறுத்தி அல்ல; கதாநாயகனை முன்னிறுத்தியே காட்சிகள் கட்டமைக்கப்படுகின்றன. தன்னுடைய புராணங்களிலும் இதிகாசங்களிலும் பற்பல தனி மனித சாகசங்களையே தெய்வச் செயல்களாக படித்தும் கேட்டும் வளர்ந்துள்ள ஒருவனால், சினிமா முன்னிறுத்தும் சாகசங்களின் நாயகனுடனும் வெகு இயல்பாக பொருந்திப் போக முடிகிறது. எல்லோராலும் அல்ல என்றாலும், கணிசமான மனிதர்களிடம், குறிப்பாக வாழ்க்கையை அதன் ஆகசாத்தியமான அத்தனை கொண்டாட்டங்களுடனும் அறிந்துகொள்ளும் முனைப்பில் இருக்கும் இளந்தலைமுறையினரிடம் அதன் தீவீர பாதிப்பை காணமுடிகிறது. சிலர், இளங்கன்றுப் பருவம் மாறி, நடப்புகளைப்பற்றிய அடிப்படையான புரிதல்கள் ஏற்பட்டதும் கடந்துவிடுகிறார்கள். சிலரால் முடிவதில்லை.

இவர்களின் இந்த பலவீனத்தை சில நடிகர்கள் திறமையாக பயன்படுத்திக்கொண்டு தங்களை வளப்படுத்திக் கொள்கிறார்கள். இவர்களைக் கொண்டே அரசியல் பேரங்களிலும் ஈடுபடுகின்றனர். இதனால் அடிமட்ட தொண்டன் எவனுக்கும் ஒரு பிரயோஜனமும் கிடையாது என்பதற்கு விஜயகாந்த் நிகழ்கால உதாரணமாக திகழ்கிறார். வேறு கட்சிகளில் போணியாகாத லோக்கல் பெரும்புள்ளிகள்தான் இப்போது விஜயகாந்த் கட்சியில் நிறைந்து காணப்படுகிறார்களேத் தவிர, விஜயகாந்தை இந்த உயரத்துக்கு ஏற்றிவிட்ட அவரின் ரசிகர்கள் அல்ல.

மாற்று சினிமாக்களின் எண்ணிக்கை பெருகும் நாட்களில் இதுவும் மாறும் என்றே நம்பலாம்.

PPattian said...

ரசிகன் என்ற ஒற்றை வார்த்தையை வைத்து இவ்ளோ எழுதிட்டீங்க. சுவாரசியம், குறிப்பாக அந்த வெங்காயக் கடை... கட்டாயம் ஒரே ஓனர்தான் :)

Thenammai Lakshmanan said...

சங்கீத மேதைகளுக்கும், எழுத்தாளர்களுக்கும் பரம ரசிகர்கள் இருக்கிறார்களே.//

ரசிகர்கள் பலவிதம் ஒவ்வொருவரும் ஒருவிதம் ஜீவா...!!

ஓவியர்களுக்குக் கூட ரசிகர்கள் உண்டு....அதை ஒரு இஷ்யூவா எழுதலாம் ...!!!

Anonymous said...

Arumai Arumai Rasiganai pirishu menjuteenga sir (Detailaaha than) Ippavum silaper rasigan mattrum rasiga mandrangalai oru vithamagathan parkirarkal avarkalum nalla samacharangakaliuk Idupadukirarkal enbathu avarkalukku therivathillai. nandri nanagalum SPB Rasigarkal peyaril oru Charitee foundatin vaithu nadathi varukirom enpathai thazhmaiyudan therivithukolkiren. enathu payearai inaithathukku mikka nandri sir. >> covai ravee

போ. மணிவண்ணன் said...

//தன்னை கவர்ந்த ஆளுமை மீதான பற்றா//ithuvaaga irukkak koodum

passerby said...

I write in English because tamil typing is not possible in my present PC.

You write interestingly telling us what you saw; and raising some pertinent questions in the end. Why didnt you attempt to answer the questions?

As Pushparaj has hinted, the cultural milieu is crucial here. In a culture where we are not allowed to develp into independent thinkers, we seek heroes to worship.

For e.g Jeyamohan. The young people who read him, indeed, aspire to become like him - voracious reader, and intellectual, boldly expressing his views and receiving both boquets and brickbats, but noted by everybody.

But they could not, for a variety of reasons - like choosing a profession which ties them up for life, family circumstnces who dont allow freedom, fear to express personal views in public, or simply, inability to have flair for lang.

So, they lionise him. It is, in other words, a wish fulfilment.

Similarly, the rural and urban youth of TN. In AP, too.

They want to be like Vishal; like to develop their muscles, talk arrogantly, want girls to look at them admiringly, take on villains etc. Ajit - urbane sophistication; Vijay - dancing, romancing where the hero is more than special and the heroine is a side kick. Rajni -raw and unsophisticated manhood.

The heroes live on screens the lives which the fans wish for but could not get at all - as the lives are illusion; even if real to some extent, it is beyond the horizon of fans' earthy lives. Vicarious living.

Lack of development as an independent and confident person, who esteems himself and become courageous to live, or accept his life, wants to be accepted as he is.

Lack of cutlural milieu which cant offer alternative entertainments - as in our rural areas.

Religion which discourages a man to be himself, parental and peer pressure to conform

Lack of employment which can be liked.

Lack of appropriate eduction which culitavates values of courage, confidence and independence thinking.

In short, we are living in a sorry world, lacking all.

Poverty, ignorance, incorrect education, crippling religion, uneven development etc.

This situation is comparable to terror-prone muslim youth. With all the above lacunae, more or less, the youth is adrift hopelessly, and become potential grounds to poach for terrorist recruits. They are easy to radicalise in a rabid religious theology.

In Britiain, the thinking is that the muslim youth should be 'caught young' and for them, a free and encouraging culture is allowed to think independently and develop their self-esteem. This is to be done through proper education and ideal entertainments.

To counter jihadis recruiting youth, proper education right from childhood is the effective tool.

It is not possible in TN to creat a new world. TN will be like that for a long, long time, to come. However, as individuals, we can give a suitable milieu to grow up for my children as parents. I did it. My son, at 15, asks: Why do they behave like this?

Ironically, the same question, you Tamilain, is asking in your blogpost, at the age of more than 50!

passerby said...

When I was browsing blogs, I stumbled upon your blog.

Serendipity!

passerby said...

Sorry for a lot of grammatical errors and misspellings in my long post. I did not review it.

Admin said...

மிக அழகாக எழுதியுள்ளீர் நன்றி

இவன்
http://tamilcinemablog.com

Ponnappan.A said...

படித்துக்கொண்டிருக்கும் போதே மனம், என் காலக் கடிகாரம் வேகமாக பின்னோக்கி ஓடியதை சற்று நிறுத்தி ரசிகனை முழுவதும் படித்தேன். அத்தனையும் நாங்கள் சிறுவர்களாக இருந்த காலத்தில் நடந்தவை. மிக மிக அழகாய் எழுதி இருக்கிறீர்கள்.

நான் சின்ன வயதில் எனது நோட்டில் சிவாஜி படம் ஒட்டி இருந்ததை எனது அப்பா பார்த்து ..... அதனால் நான் பட்ட ஏச்சும், நோட்டுக்கு கிடத்த மரண தணடனையும்....... ஞாபகத்திற்கு வருகிறது.

I cant find suitable words to praise you

பாலகிருஷ்ணன் said...

பட ரிலீசுகளின்போது 'சைக்கிள்'களை 'லைனில்' போட்டு டிக்கெட் வாங்குவதும், ரிலீசுக்கு முன்னதான நாட்களிலே ரோட்டில் சைக்கிள்களை வரிசையில் போடுவதும் அழகிய அனுபவங்கள்.