Thursday, November 3, 2011

நூலகங்கள்!


அண்ணா நூற்றாண்டு நூலகத்தை இடம் மாற்ற போகிறார்கள் என்ற செய்தி பலரின் அதிருப்தியை சம்பாதித்திருக்கிறது. பல கருத்துக்கள் விவாதிக்கப்படுகின்றன!! நூலகம்..எவ்வளவு அழகான வார்த்தை!!!! எனது டியூஷன் மாஸ்டரும், என் தந்தையின் நண்பருமான பஷீர் அவர்கள் என்னை விரல் பிடித்து கோவை மத்திய நூலகத்திற்கு அழைத்து சென்று குழந்தைகள் பகுதியில் அமர வைத்தது இன்றும் நினைவிருக்கிறது. காமிக்ஸ் புத்தகங்களுடன் தொடங்கிய தொடர்பு பின்னர் நான் வளர வளர விரிவடைந்தது. சிதம்பரம் பூங்கா அருகில் இருந்த அந்த நூலகம் பின்னர் ஆர்.எஸ்.புரம் பகுதிக்கு இடம் பெயர்ந்தது.. இந்த கட்டிடத்தில் அருங்காட்சியகம் வந்து, பின்னர் குண்டு வெடிப்பு விசாரணை நீதிமன்றமாகவும் மாறி, இப்போது பூட்டி கிடக்கிறது!!!

கிக்கானி பள்ளியில் ஆறாவது வகுப்பில் சேர்ந்தபோது பள்ளியில் என்னை எதுவும் கவரவில்லை, நூலகத்தை தவிர. விளையாட்டுகளில் ஈடுபாடு இல்லாததால் மதிய இடை வேளைகளிலும் கூட நூலகமே கதியாயிற்று. காலையில் எட்டரை மணிக்கே நூலக வாசலில் காத்து கிடப்பேன். எனக்காக நூலகர் நடராஜன் அந்நேரத்திற்க்கே சைக்கிளை மிதித்து கொண்டு வருவார். பள்ளியில் இந்தியும் ஆங்கிலமும் மட்டுமே படித்து வந்த எனக்கு தமிழின் கதவுகளை பள்ளி நூலகம் திறந்து விட்டது.

பல மாலை நேரங்களில் டவுன்ஹால் மாடியில் இருந்த புராதான நூலகம் எனது வாசஸ்தலமானது. யாராவது படியேறி வந்தாலே..திம் திம் என்று நூலகமே அதிரும்!!!! மேசைகளில் படிப்பது போல பாவனை செய்துகொண்டு தூங்குபவர்கள் திடுக்கென விழித்து எழும் சூழ்நிலைகள் அடிக்கடி ஏற்படுவதுண்டு. இன்று அங்கு நூலகம் இல்லை. பல இலக்கிய நிகழ்ச்சிகள் நடைபெற்ற அந்த நூறாண்டு கடந்த மண்டபம் இன்று நகர்மன்ற கூட்டங்கள் நடக்கும் கூடமாகிவிட்டது.

மணிக்கூண்டை தெரியாத கோவைவாசிகள் இருக்க முடியாது. அங்கும் வெறும் செய்தித் தாள்களுக்கு மட்டுமே ஒரு நூலகம் இருந்தது. ஒரே பேப்பரை பல பாகங்களாக்கி பெருசுகள் படித்துக்கொண்டிருப்பார்கள். இன்று மணிக்கூண்டு இருக்கிறது, அதனுடன் ஒட்டியே கழிப்பறைகளும் இருக்கின்றன. நூலகம் மட்டும் இல்லை!

கோவை அரசினர் கல்லூரியில் சேர்ந்தவுடன் நான் விஜயம் செய்த முதல் இடம்....யூகித்திருப்பீர்கள்....அங்குதான்! அங்கு நூலகத்தினுள் மாணவர்களுக்கு அனுமதி இல்லை. நமக்கு வேண்டிய புத்தகத்தை கேட்லாக்கை பார்த்து , தேர்ந்தெடுத்து, நூலகரிடம் சொன்னால் அவர் எடுத்து வைப்பார். 'பில்கிரிம்ஸ் பிராக்ரஸ்' புத்தகத்தை நான் கேட்டவுடன், வெறுப்பாக பார்த்து, இரண்டு நாட்களுக்கு பிறகு கொடுத்தார், 'படிக்கவா, பந்தா பண்ணவா' என்ற கேள்வியுடன். பின்னர் அவரும் எனது நலம் விரும்பியானார் என்பது காலத்தின் கட்டாயம்!

சென்னை மாநிலக்கல்லூரியில் சேர்ந்த பிறகுதான் நூலகங்களின் பிரம்மாண்டம் என்னை வசீகரித்தது! அண்ணா சாலை நூலகத்தில், கிரேக்க அரசியல் தத்துவ நூலை தேடி சென்றபோது, பின்னர் இதே வளாகத்தில் எனது நூல் ஒரு நாள் வெளியிடப்படும் என்று கனவில் கூட நினைத்திருக்க மாட்டேன். பிரிட்டிஷ் கவுன்சில் நூலகமும் அமெரிக்கன் நூலகமும் பிரம்மிப்பூட்டின. அமெரிக்கன் நூலகம் எனக்கு மிகவும் பிடித்த இடமானது. குளிரூட்டப்பட்ட வளாகம், அதிசயமாய் தெரிந்த வீடியோ கேசட்கள், அதன் குடிநீர் குழாய்களும் கூட மனதை கவர்ந்தன. திரைப்படம், கவிதை சார்ந்த நூல்களை அதிகமாய் படித்தது இங்குதான். சென்னை பல்கலைக்கழக நூலகமும் அண்ணா சாலை நூலகம் போலத்தான் இருந்தது. காதலர்களுக்கான இருட்டு மூலைகள், இடம் மாறிக்கிடக்கும் புத்தகங்கள் , எங்கேயாவது குருட்டாம்போக்கில் தென்படும் பொக்கிஷங்கள் என்று ஒரு மாயத்தன்மை நிறைந்த இடம். கன்னிமாரா நூலகம் அப்படி இருந்ததில்லை. அதுவும் ஒரு அற்புதச்சுரங்கம். அதன் சிறப்பு அதன் வளாகமும். அருங்காட்சியகமும் , மியூசியம் தியேட்டரும் ரசிகனுக்கு கூடுதல் பரிசுகள்!

ஏனோ மாநிலக்கல்லூரி நூலகம் என்னை கவரவில்லை. மாறாக எங்கள் விக்டோரியா விடுதி நூலகம் எனது இரண்டாவது விடுதி அறையாக மாறிப்போனது. பகுதி நேர நூலகராக அங்கு பணி புரிந்த பால்ராஜை, காக்காய் பிடித்து, பல நூல்களை மாதக்கணக்கில் என் அறையில் வைத்து படிக்கும் ஏற்பாடை செய்து கொண்டேன்.! அவற்றில் ஒன்று எஸ்.கிருஷ்ணசாமி எழுதிய 'இந்தியன் பிலிம் '! திருவல்லிக்கேணியில் இன்னொரு நூலகத்தை கண்டு பிடித்தேன். அது 'ஹிந்து' பத்திரிக்கை நிறுவனர் கஸ்தூரி அய்யங்கார் பெயரை கொண்டிருந்தது. பெரும்பாலும் ஹிந்து நிறுவனத்திற்கு வந்த நூல்களை இங்கு பொது மக்களுக்கு பயன் பெரும் வகையில் வைத்திருந்தனர். வழக்கம் போல அந்த நூலகரும் என் நண்பரானார்! அரிய நூல்களை தந்து உதவினார்!

கல்லூரி வாழ்க்கையில் ஏமாற்றம் தந்த நூலகம் கோவை சட்டக்கல்லூரி நூலகம்தான். நாங்கள்தான் கல்லூரிக்கே முதல் செட். ஒரு வாடகை கட்டிடத்தில் இயங்கியது கல்லூரி. எந்த வசதிகளும் இல்லை. விளையாட்டுகளுக்கு நிதி ஒதுக்க்கப்பட்டு விளையாட்டு சாதனங்கள் எல்லாம் வாங்கப்பட்டன. ஆனால் நூலகம் இல்லை. நூலகம் வேண்டி மனுக்கள் அனுப்பினோம். விசாரணைக்கு உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் வந்தார். பெட்டிஷன் பார்ட்டிகளான நாங்கள் மூவரும் அவர் முன் நின்று வீராவேசத்துடன் இது என்ன சட்டக்கல்லூரியா, உடற்பயிற்சிக் கல்லூரியா ..எங்களுக்கு உடனடித்தேவை நூலகம்தான் தவிர பந்துகளும் மட்டைகளும் அல்ல என்று முழங்கினோம். நீதிபதி உணர்ச்சிவசப்பட்டுவிட்டார். 'தம்பிகளா, என் இத்தனை வருஷ சர்வீசில் இப்படி சட்டக்கல்லூரி மாணவர்களை பார்த்தில்லையப்பா, இதோ வருகிறது நூலகம்'! என்று ஆணையிட்டு நூலகமும் வந்தது..! ஆனால் நாங்கள் யாரும் உள்ளே எட்டி பார்க்கவில்லை என்பதுதான் விசேஷம். 'ஒரே பார்வையில் முப்பது
கேள்விகள்' என்ற கைடுகள்தானே தானே எங்களுக்கு ஆபாத்பாந்தவர்கள்! வழக்கம் போல நூலகர்தான் நண்பரானார்....பின்னர் மன உபாதைகளால் வேலை நீக்கமும் செய்யப்பட்டார்!!!

நூலகங்கள் என்றாலே, அங்கு வரும் விதவிதமான மனிதர்கள்தாம் நினைவுக்கு வருவார்கள். நிறைய புத்தகங்களை தங்கள் முன் குவித்து வைத்து கொண்டு குறிப்பெடுக்கும் ஆராய்ச்சி மாணவர்கள், எல்லோரும் தேடும் வாரப்பத்திரிகையை, தான் படிக்கும் பேப்பருக்கு கீழ் ஒளித்து வைத்து பாதுகாக்கும் அற்ப ஜீவிகள், தங்களுக்கு வேண்டிய நூலை, வேறொரு செக்சனில் ஒளித்து வைக்கும் கில்லாடிகள், பனியனுக்குள் புத்தகத்தை வைத்து வெளியே கடத்தும் அறிவுத்தாகம் மிக்கவர்கள்,குறட்டை விட்டு தூங்கும் உல்லாசிகள், பெரும்பாலும் கடுகடுப்பை சுமந்து கொண்டிருக்கும் நூலக சிப்பந்திகள், ரெபரென்ஸ் புத்தகங்களில் முக்கிய தாள்களை கிழித்து திருடி செல்லும் பொதுநலவாதிகள், நூல்களில் தங்கள் கருத்தை எழுதி வைப்பவர்கள், பல சமயங்களில் கெட்ட வார்த்தைகளால் இந்த நூலை படிக்க போகிறவர்களை திட்டி எழுதியிருப்பவர்கள், பெண்களின் கவனத்தை கவர மெகா நூல்களை படிப்பது போல நடிப்பவர்கள்......அது ஒரு தனி உலகம்தான்!!!

யோசித்து பார்க்கும்போது மாணவப் பருவத்துடன் நூலகங்களின் தொடர்புகள் அற்றுப் போய்விட்டன என்ற கசப்பான உண்மை இப்போது சுடுகிறது. உண்மை எப்போதும் சுடுவதுதானே!

Sunday, March 20, 2011

நினைவிருக்கிறதா, அவசர நிலையை?





முப்பது வருடங்களுக்கு மேலாயிற்று...அந்த கொடிய காலங்களின் ஆட்டங்கள் நிகழ்ந்து!!!
அப்போது நான் மாணவன் . திடீரென்று அந்த செய்தி வந்தது. 'அவசர நிலை பிரகடனம்'....! அப்படி என்றால் என்னவென்பதே பலருக்கு தெரியாது. இதற்கு முன் ஒரு போரின்போது இது அறிவிக்கப்பட்டதாக சிலர் சொன்னார்கள். தேர்தல் முறைகேடுகளால், இந்திராகாந்தி பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்று அலகாபாத் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை , நாட்டுக்கே ஆபத்து என்று திரித்து, அவசர நிலை பிரகடனம் செய்தார் அம்மையார்! அப்போதைய ரப்பர் ஸ்டாம்ப் ஜனாதிபதியான பக்ருதீன் அலி அகமது இந்த சட்டத்தையும், பின்னால் வந்த பல அவசர சட்டங்களுக்கும் மறுப்பேதும் சொல்லாமல் கையெழுத்து போட்டு தள்ளிக்கொண்டிருந்தார்! என்ன ஏது என்று புரிவதற்குள் எதிர்கட்சி தலைவர்கள் அனைவரும் சிறை வைக்கப்பட்டனர். ஆயிரக் கணக்கான தொண்டர்களும் சிறையில்.. பலர் தலைமறைவானார்கள்! அப்போது தமிழ்நாட்டில் திமுக ஆட்சி. காங்கிரசுக்கு எதிரான நிலை. தலைவர்கள் பலர் தமிழகத்தில் தலைமறைவாக தஞ்சம் புகுந்தனர். ஜார்ஜ் பெர்னாண்டஸ் கோவை பேரூரில் ஒரு வீட்டில் தலைமறைவாக இருந்தார் என்றெல்லாம் நண்பர்கள் சொன்னார்கள்! போராட்டங்கள் தடை செய்யப்பட்டன. வீராதி வீர சூராதி சூர தொழிற்சங்க தலைவர்கள் எல்லோரும் கப்சிப். நேரத்துக்கு ரயில்கள் ஓடின...காலை பத்து மணிக்கெல்லாம் அவரவர் சீட்டில் அரசு ஊழியர்கள் பவ்யமாக அமர்ந்தனர்! யாரை வேண்டுமானாலும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று உதைக்கலாம், கைது செய்யலாம், சித்ரவதை செய்யலாம், கொலை கூட செய்யலாம் என்ற நிலை உருவானது. அடக்குமுறைக்கு எதிரான குரல்கள் ஒடுக்கப்பட்டன. எதிர்த்து குரல் கொடுத்த பெரும் தலைவர்கள் ஜெயபிரகாஷ் நாராயணன், கிருபளானி, மொரார்ஜி, சரண்சிங் போன்ற தலைவர்கள் எந்த காரணமும் இன்றி கைது செய்யப்பட்டனர். பல அமைப்புக்கள் தடை செய்யப்பட்டன. ஆர்.எஸ் .எஸ். இவற்றில் ஒன்று. சில கட்சிகள் எதிர்த்து குரல் கொடுத்தன..மார்க்சிஸ்ட் கட்சியும் திமுகவினரும் இதில் அடங்குவர். இவர்களின் தலைவர்களும் தொழிற்சங்க வாதிகளும் கைது செய்யப்பட்டு சிறையில் கடும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டனர். இவர்களை முடக்கிய சட்டமான 'மிசா'வையே பலர் பின்னாளில் பட்டமாக அணிந்து கொண்டனர்.

இந்த கொடிய அடக்குமுறைக்கு ஒரு பட்டுக்குஞ்சலம் கட்டினர் இந்திரா காந்தியும் அவருடைய ஆலோசகர்களும்...இருபதம்ச திட்டம் என்ற பெயரில்! நாட்டு நலனுக்கு என்று இருபது திட்டங்களை அறிவித்து இருபத்தி நாலு மணிநேரமும் இதன் பஜனை பாடினார்கள். ‘Be Indian, Buy Indian’ என்பது இதில் ஒன்று. இதன்படி அந்நிய பொருட்களுக்கு தடை என்ற வதந்தி கிளம்பியது. அப்போது கடத்தல் என்பது பெரும் தொழில் அல்லவா! அந்நிய வாட்சுகள், அந்நிய டேப் ரிக்கார்டர்கள் என்று இந்தியாவுக்கு கடத்தப்பட்ட பொருட்கள்தான் பரவலாக நம் மக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்த செய்தி கேட்டதும் அனைவரும் இவற்றை வீட்டுக்குள் மறைத்து வைத்த காமெடிகளும் நடந்தன. திடீரென்று ஒரு வதந்தி கிளம்பும்...'மேம்பாலத்துல கஸ்டம்ஸ் செக்கிங் பண்ணி பாரீன் வாட்சுகளை பிடிக்கிறாங்களாம்' என்று...அவ்வளவுதான்...அனைவரும் தத்தமது சீக்கோ, ரீக்கோ வாட்சுகளை உள்ளாடைக்குள் மறைத்து வைக்காத குறையாய் ஒளித்து வைத்து நடமாடுவார்கள்!

கோமாளி இளவரசனைப் போல் சஞ்சய் காந்தியின் கொடூரங்கள் பிரபலமாயின. குடும்ப கட்டுப்பாட்டு திட்டத்தை பலவந்தமாக குடிசைவாசிகள் மீது பிரயோகப்படுத்தினார். தில்லியை அழகுபடுத்துகிறேன் பேர்வழி என்று துர்க்மான் கேட் குடிசைகள் மீது புல்டோசர்களை ஏவினார். அவசர நிலையை கேலி செய்து எடுக்கப்பட்ட 'கிச்சா குர்சி கா' படத்தின் நெகடிவ்களை கைப்பற்றி கொளுத்தினார். காங்கிரஸ்காரர்களின் அட்டகாசம் அதிகரித்தது...தங்களுக்கு வேண்டாதவர்களை உள்ளே தூக்கி போட அவசர நிலை அவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக ஆயிற்று! கல்லூரி விடுதிகளுக்குள்ளும் காவல் துறை நுழைந்தது. புரட்சிகர சிந்தனை மிக்க மாணவர்கள் இழுத்து செல்லப்பட்டனர்.கேரளத்தில் ராஜன் என்ற மாணவன் காவல் நிலையத்தில் கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இன்று வரை அவன் உடலுக்கு என்ன ஆயிற்று என்ற தகவல் இல்லை. எதிர்ப்பு குரல் கவிஞர்களும் இலக்கியவாதிகளும் காவல் நிலையங்களில் தொங்க விடப்பட்டு உதைக்கப்பட்டனர்..உருளைக்கட்டை சிகிச்சைகள் செய்யப்பட்டு நடக்க முடியாதவர்கள் ஆனவர் பலர். இயல்பாகவே ஆதரவுக்குரல் கொடுப்பவர்களும் உருவாயினர். 'இந்திராதான் இந்தியா' என்ற டி.கே.பருவாவின் புகழ் பெற்ற ஜால்ரா வார்த்தையை சிரமேற்க்கொண்டு தமிழகத்தில் இலக்கியங்கள் உருவாகின. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கிட்டத்தட்ட இந்திராவின் மக்கள் தொடர்பாளராகவே மாறி, இந்தோ சோவியத் கழகம் சார்பில் பல கருத்தரங்கங்கள் நடத்தியது. இன்றும் நினைவிருக்கிறது...முன்னாள் துணைவேந்தர் நெ.து.சுந்தரவடிவேலு இருபதம்ச திட்டத்தின் புகழ் பாடும்போது சொன்ன வரி...காஷ்மீர் ஆப்பிளை இங்கே இருப்பவனும் வாங்கி திங்க பயன்படுகிறது இந்த திட்டம் என்று. ஒரு இழவும் புரியவில்லை அப்போதும் இப்போதும்! வினோபா பாவே, அன்னை தெரசா, குஷ்வந்த் சிங் போன்றவர்கள் பகிரங்கமாக அவசர நிலையை ஆதரித்தனர் என்று சொல்வார்கள். எம்.எப்.உசைன் என்ற ஓவியரின் அடிவருடித்தனம் உச்சமானது. அவர் இந்திராவை ஒரு துர்கையாக சித்தரித்து ஒரு மாபெரும் ஓவியத்தை காட்சிக்கு வைத்தார்.

பத்திரிக்கை தணிக்கை அப்போது கொடி கட்டி பறந்தது. ஹிந்து போன்ற பத்திரிகைகள் கப்சிப் ஆயின. எதிர்ப்புக்குரல் இந்தியன் எக்ஸ்பிரஸ், துக்ளக் போன்ற பத்திரிகைகளில் இருந்து மட்டும் வந்தன. அதிகாரிகளுக்கு ஒரு செய்தி பிடிக்கவில்லை என்றால் நீக்கப்பட்ட பின்புதான் அச்சுக்கு போயின. அப்போதைய பத்திரிகைகளில் பல பத்திகள் காலியாகவும் வெள்ளையாகவும் இருப்பதை பார்க்கலாம். துக்ளக்குக்கு பயங்கர டிமாண்டு, பல பக்கங்கள் வெள்ளையாய் இருந்தும்! ஒரு இதழில் எம்ஜியார் நடித்த 'சர்வாதிகாரி' படத்தின் வசனங்களை பல பக்கங்களுக்கு அச்சடித்திருந்தார் சோ! வானொலியை திருப்பினால் எப்போதும் 'இருபதம்ச திட்டம்...ஆஹா...இது இந்திராவின் சட்டம்...ஓஹோ' என்ற கண்றாவி பாட்டை கேட்க வேண்டியது தலைவிதியானது! திரைப்படத் தணிக்கைகளும் தடைகளும் இன்னும் பிரபலம். குடிப்பது போன்ற காட்சிகளும், வன்முறைச்சண்டைகளும் கத்திரிக்கு பலியாயின. அரசை விமர்சிப்பது போல காட்சிகள் வந்தால் அம்போதான்! திரைப்பட பிரபலங்களை பந்தாடினர் அதிகாரிகளும் மந்திரிகளும்.

தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி ஒரு நாள் பிரகடனப்படுத்தப்பட்டது! பல தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். ஸ்டாலின், முரசொலி மாறன் போன்றவர்கள் உள்ளே! மக்கள் மத்தியில் குமுறல்கள் உருவாகத் தொடங்கின. நான் அப்போது சென்னை மாநிலக்கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தேன். சிறையில் சிட்டிபாபு அடித்து கொல்லப்பட்டார் என்று தகவல் பரவியது. அவரது உடல் திருவல்லிக்கேணியில் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தது. அங்கு குழுமிய மக்களின் உணர்வுகள் இன்றும் பசுமையாக மனதில் பதிந்திருக்கிறது!
சிறைக் கொடுமைகள் பற்றிய பல தகவல்கள் பரவின. அதே நேரத்தில் முரசொலி அடியார் போன்ற சிலர் சிறை ஒரு உல்லாசக்கூடம் என்பது போன்ற தகவல்களையும் பரப்பினர். ஜால்ரா அடித்துக்கொண்டிருந்த பொதுவுடமைக்கட்சியில் இருந்தும் எதிர்ப்பு குரல்கள் வரத்தொடங்கின. அதில் முக்கியமானவரான ராஜேஸ்வர ராவுக்கு மாநிலக்கல்லூரி மாணவர்கள் சார்பாக நாங்கள் மாலை அணிவித்தோம். எல்லாவற்றுக்கும் ஒரு முடிவு வரவேண்டுமல்லவா. 1977ல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை கண்டது. இந்திரா, சஞ்சய் போன்றவர்கள் கூட அவர்கள் தொகுதியில் தோற்றனர்! மக்களும் சகஜ நிலைக்கு திரும்பினர்!

அப்போது ஒரு நாள் ஜனாதிபதி இறந்ததால் கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. ஒரு மனிதரின் மறைவுக்கு மாணவர்கள் மத்தியில் அப்படி ஒரு மகிழ்ச்சி ஆரவாரம் எழும்பியதை நான் பிறகெப்போதும் கண்டதில்லை!

Monday, March 14, 2011

'நாங்க மன்னரும் இல்லே......'


வாங்க! வாங்க !!
டீ கூட சாப்பிடலை ..அதுக்கு ஒரு அஞ்சு நிமிஷம் வேஸ்ட்....
அட்டடே.. வாங்க
உக்காருங்க...
எங்க...ஊருக்கா?
இல்ல...ஊரிலிருந்து வர்றேன்....
டிராவல்ஸ் பஸ்ஸா?
இல்லை...ரயிலு..!...
வீடு அதே வீடுதானே?
ஆமா..மாடிலே ஒரு வீடு அங்கே போக்கியத்துக்கு இருக்கு..அருவதாயிரம்...!
அப்படி ஒண்ணும் இல்லையே..
அந்த வீட்டுக்காரம்மா கூட தீப்புடிச்ச மாதிரி இருப்பாங்க....
ஆமா ஆமா...
முடிச்சிரலாமா?
வேண்டாங்க..எனக்கு இது போதும்..ஆயிரத்தி ஐநூறு தான் வாடகை...தனி ஆளுதான்! போதும்!
சார்...இந்த மூட்டைப்பூச்சிக்கு என்ன மருந்து சார் பெஸ்ட்? சனியன் என்ன பண்ணினாலும் போகமாட்டேங்குது..வீட்டுக்காரம்மாவுக்கு விடிய விடிய என்ன வேலைங்குறீங்க...மூட்டைபூச்சியை பிடிக்கவேண்டியது...மக்கிலே தண்ணிலே போடவேண்டியது....நமக்கு பெட்டு வாசல்லதான்...பன்னெண்டு மணியிருக்கும் ..டக்குன்னு எந்திரிச்சி பாக்குறேன்..கழுத்து பூரா மூட்டைபூச்சி...ஏன் கேக்குறீங்க...எஸ்.வி.லாண்டரிலே ஒரு மருந்து அடிச்சாராம்...அறுவது ரூவாயாம்...இன்னைக்கி வாங்கீர வேண்டியதுதான்.

எங்க சார் பில்டிங் எல்லாம் இப்ப கட்ட முடியாது போல...பத்து வருசத்துக்கு முன்னாலே நம்ம ஹோட்டல்காரர் 22 லச்சத்துக்கு வீடு கட்டுனாரு...இப்ப வாடகையே...வருசத்துக்கு 4 லச்சம் வருது....ஹூம்...!
தங்கம் பாருங்க என்ன விலை விக்குது...! நெருங்க முடியுமா? இவரு எப்படி சம்பாரிச்சாருன்னு நினைக்கிறீங்க?

எவரு?
அட அவருதாங்க.....(ஒரு கிசுகிசுப்பு)
பாம்பேக்கு போகவேண்டியது....நல்ல தண்ணியடிக்கனும்... வெள்ளை தோல்காரிங்க கூட கூத்தடிக்கணும்....சேட்டு பொம்பளைங்கள.........டாராமா!!! இங்கேயிருந்து ஒரு கோஷ்டியே கூட போகும்....எல்லாம் அழுக்குபசங்க... ஒருத்தன் பக்கத்திலே போமாட்டான்! குடும்பத்தோட அன்ரிசர்வ் பொட்டிலே வருவானுங்க...பைக்குள்ள தங்க பிஸ்கட் இருக்கும்னு ஒருத்தனுக்கும் தெரியாது. அல்வா மாதிரி பிஸ்கட் இங்க வந்திரும்....ஒரு ஐயாயிரம் கொடுத்தா ஒரு மாசத்துக்கு சந்தோசமா ஆடுவானுங்க....இப்பதான் தங்க கட்டுப்பாடே இல்லையே!!!

சார், அம்பது ரூபா சார் இப்ப, சங்கத்திலே தீர்மானம் போட்டாச்சு.. பாருங்க அட்டை கூட மாட்டியிருக்கேன்.

ஓயாத பேச்சு, சதா இயங்கும் கைகளைப் போல ! சலூன்கள்தான் எப்படிப்பட்ட உலகங்கள்! சிறுவயது முதல் எவ்வளவு தடவைகள் இங்கு விஜயம் செய்திருக்கிறோம். தகர டப்பா சலூன் முதல் ஏசி பந்தா அழகு நிலையம் வரை எவ்வளவு ரகங்கள்...! நம் நாட்டில் ஆணாய் பிறந்த எவருக்கும் மறக்க இயலா உலகம் இந்த சலூன் கடைகள்...தலையை பிடித்து அமுக்கி, வெள்ளை துணி போர்த்தி , உம்மென்று முகமெல்லாம் மயிர்த்துகள்கள் ஊறிக்கிடக்கும் சிறுவர் முகங்கள் முதல் கடு கடு வென்று பீடி நாற்றம் கமழும் முகங்கள் வரை எத்தனை முகங்களை இந்த கடைகள் பார்த்திருக்கும்! உலக அரசியல் முதல் உள்ளூர் அரசியல் வரை அலசப்படும் அரங்கம். அனல் வீசும் அரசியல் வாதப் பிரதிவாதங்களை, வரிசையில் இருந்தும் கண்டுக்கப்படாத சிறுவர்களாய் நாம் எத்தனை முறை கேட்டிருப்போம். எத்தனை லோக்கல் கிசுகிசுக்கள் அலசப்பட்டிருக்கும்! சரக்கென்று உயரும் கைகளின் நடுவே அக்குளுக்குள் கத்தி சுரண்டும்போது...இது எப்ப நமக்கு என்று ஆவென்று எங்கும் சிறுவர்கள்...!

எத்தனை விதமான கடைகள்....தரையிலிருந்து ஒரு அடி உயரத்துக்கு மேல், கள்ளிப்பெட்டியினால் உருவாக்கப்பட்ட சிங்கிள் சேர் கடைகள், இயற்கை காட்சிகள், சினிமா போஸ்டர்கள், கவர்ச்சி கன்னிகளின் படங்களுக்கு நடுவே முகம் பார்க்கும் கண்ணாடிகளும் பதிக்கப்பட்ட சுவர்கள், மட்ட ரக பவுடர்களுக்கே உரிய மணம், சலூன்களுக்கே உரிய பிரத்யேக பிராண்டு கிரீம்கள், லோஷன்கள், கத்தியை சாணை பிடிக்க தொங்கும் ஒரு பெல்ட், சடாரென்று உதறப்பட்டு கபக்கென்று போர்த்தப்படும் 'வெள்ளை' சலவை துணிகள், மயிர் துண்டுகளை சேகரிக்க மூலையில் ஒரு டப்பா, கசங்கி கிடக்கும் தினத்தந்தி தாள்கள், நாளை கிழிக்கப்பட்டு கத்தி மீது படர்ந்து கிடக்கும் சோப்பை வழிக்க பயன்படலாம் அவை...., கத்திரிக்கோல், சீப்பு, கடக் கடக் என்று தலையில் பயணம் செய்யும் கிராப் வெட்டி என்று அழியாத கோலங்கள்! இன்று காலங்கள் மாறிய பிறகும் இவையெல்லாம் இன்னும் இருக்கின்றன பெரும்பாலான கடைகளில்.! நான் போகும் கடையில் கிராப் வெட்டிக்கு மின்சார இணைப்பு ஒரு கூடுதல் வசதியாக இப்போது தென்படுகிறது.

இலக்கியங்களில் இவர்களை பற்றி ஏதேனும் குறிப்புகள் உண்டா? நாஞ்சில் நாடன், தோப்பில் முகமது மீரான், நாகராஜன் படைப்புகளில் இவர்களை சந்தித்ததுண்டு. திரைப்படங்களில் அபூர்வம். பழைய 'கடவுளை கண்டேன்' படத்தில் எம்.ஆர்.ராதா பார்பர் ஷாப்காரராக வந்து 'நாங்க மன்னரும் இல்லே, மந்திரி இல்லே, வணக்கம் போட்டு தலையை சாய்க்கிறார்,' என்று பாடலுக்கு நடித்த காட்சி இருக்கிறது. பொய்க்கால் குதிரை, வறுமையின் நிறம் சிவப்பு, கிழக்கே போகும் ரெயில், இது நம்ம ஆளு, மாயக்கண்ணாடி, குசேலன் என்று சில சித்தரிப்புக்கள் இருந்தன. மலையாளப்படங்களில் சீனிவாசன் போன்ற நடிகர்கள் பல படங்களில் இத்தகைய வேடங்களையும் சூழல்களையும் உருவாக்கியிருக்கின்றனர்.

பொருளாதார நிலைகளில் உயர்ந்திருக்கும் சலூன் கடைக்காரர்களையும் சந்தித்திருக்கிறேன். எங்கள் ஏரியாவில் பல கடைகளுக்கும் வீடுகளுக்கும் உரிமையாளர் ஒரு சலூன் அதிபர். காலையில் ஆறு மணிக்கெல்லாம் இவர் கடை திறந்து தொழில் செய்வதை பார்க்கலாம். எனக்கு ஒரு கோடீசுவரன் தான் முடி வெட்டுகிறார் என்று நண்பர்களிடம் விளையாட்டாக சொல்வதுண்டு. இன்று சலூன் கடைகள் ஒரு குறிப்பிட்ட சாதியினரின் தொழிற் களமல்ல. அழகு நிலையம் என்ற பெயரில் இன்று பிராமணப் பெண்கள் கூட முடி வெட்டுகின்றனர்! ஏசி வசதிகள், தலை கழுவ வாஷ் பேசின்கள் , டிரையர்கள், முடி வெட்ட ஆயிரக்கணக்கில் என்று சலூன்களில் வசதிகள் பெருகி விட்டாலும்...இன்றும் நான் எங்களது சந்தில் சின்ன கடை வைத்திருக்கும் நண்பருக்காக அவர் கடை வாசலில் காலை ஆறு மணிக்கே காத்து கிடக்கிறேன். ..சைக்கிளில் வந்து அவர் கடையை திறந்து கூட்டி பெருக்கி, இலவச டிவியையும் ஆன் பண்ணி அழைக்கிறார்...
'வாங்க'!!

Friday, March 11, 2011

ஓவியம் வரைந்தால் போதுமா?


நான் முதலில் பார்த்த ஓவிய கண்காட்சி எனது பன்னிரண்டு வயதில். ஆர்.எஸ்.புரம் லேடீஸ் கிளப்பில் யூசுப் புராவும் பிரகாஷ் சந்திராவும் நடத்திய நவீன ஓவிய கண்காட்சி . என்னை விட நான்கு வயது இளைய தம்பியும் நானும் தனியாக சென்றோம். ஒரு ரூபாய் நுழைவு கட்டணம்...அது கூட கையில் இல்லை...திரு திரு என்று நின்று கொண்டிருந்த எங்களை பரிதாபமாக பார்த்த பிரகாஷ்ஜி இலவசமாக அனுமதித்தார். ஆர்வமுடன் பார்த்த எங்களிடம், எப்படி இருக்கின்றன ஓவியங்கள் என்று ஆங்கிலத்தில் வினவினார். 'ஒன்றுமே புரியவில்லை' என்று பதிலளித்த என்னை பார்த்து வெடிச்சிரிப்பு சிரித்தார்...'வயதானால் புரிந்துவிடும்' என்று சொல்லி தட்டிக் கொடுத்தார்!!!

வயதானது...புரிந்துவிட்டதா என்ன?

கல்லூரி பருவத்தில் அதே பிரகாஷ் சந்திராவும் நண்பர்களும் ஆரம்பித்த சித்ரகலா அகாடமியில் மாணவ உறுப்பினராக இணைந்தேன் . ஓரிரு வருடத்தில் செயலாளர், பின் உதவி தலைவர், பின் தலைவர் என பொறுப்புகள் என் தலையில்....அவர்தான் என் நவீன ஓவிய குருவாக திகழ போகிறார் என்று குழந்தை பருவத்தில் நிச்சயமாக நினைத்திருக்க மாட்டேன். எத்தனை எத்தனை ஓவியக்காட்சிகள்...எத்தனை ஓவியர்கள் என் வாழ்க்கை பாதையில் ! நவீன ஓவியங்கள் குறித்து பல அன்பர்கள் 'புரியவில்லை', 'ஏமாற்று வேலை' என்றெல்லாம் விமர்சிக்கும்போது எனக்கு மிகவும் கோபம் வரும். இப்போதெல்லாம் வருவதில்லை என்பது ஒரு நல்ல விஷயம்! ஏனென்றால் எனக்கும் இந்த சந்தேகங்கள் வந்துவிட்டன. ஓவியங்களை ரசிக்கும்போது நான் பார்ப்பவை ஓவியரின் உத்திகள், வண்ணங்களின் பயன்பாடு, ஓவியத்தின் உள்ளடக்கம் மட்டுமே. ஓவியங்கள் பார்வையாளர்களுடன் தொடர்பு கொள்ளும் ஒரு ஊடகம் என்பதில் எப்போதும் எனக்கு நம்பிக்கை உண்டு. அவனை அது தொடவில்லை என்றால் அந்த படைப்பு ஒரு தோல்வி என்றும் திடமாக எண்ணுகிறேன். சில அதி நவீன ஓவியர்களுடன் ஏற்படும் சூடான விவாதங்களில் காரசாரமாக பேசியிருக்கிறேன். ஓவியம் என்பது அவர்களின் சொந்த மன வெளிப்பாடு என்று சொல்லிக்கொண்டு கன்னா பின்னா என்று வரைந்து வைத்த ஓவியர்களிடம்..அப்ப இதை எதுக்கய்யா எங்கள் பார்வைக்கு வைக்கிறீர்கள், உங்கள் வீட்டுக்குள்ளேயே வைக்க வேண்டியதுதானே என்றெல்லாம் சண்டை போட்டிருக்கிறேன். இப்படி ஒரு சண்டையை ஆதிமூலம் அவர்களுடன் போட்டவுடன்தான் என் ஞானக்கண்ணை அவர் திறந்து வைத்தார்! பிறகு திறந்த மனதுடன் நவீன ஓவியங்களை ரசிக்க தொடங்கினேன். அவருடைய மனவெளி ஓவியங்களில் மனதை பறி கொடுத்தேன். மருதுவின் வீச்சுகள் எனக்கு வீரம் கொடுத்தன...கான்வாஸில்!
முப்பத்தி மூன்று வருடங்கள் ஓவிய கண்காட்சி அனுபவங்களுக்கு பிறகும் அரூப ஓவியங்கள் கைகூடாததில் இன்னும் வருத்தம் ஓயவில்லை!!! எது என்னை தடுக்கிறது ?

என் வளர்ப்பு முழுக்க முழுக்க சினிமா பேனர் பின்னணியில். என் தந்தை முறையாக ஓவியம் படித்ததுபோல் நான் பயிலவில்லை.புகைப்படத்தை போல தத்ரூபமாக ஓவியமும் திகழவேண்டும் என்ற பாரம்பரிய மன ஓட்டமே என்னையும் நடத்தி சென்றது. உருவங்களை சிதைத்து புதிய பாணியை உருவாக்கிய பிக்காசோவுக்கு இளமைக்காலம் இப்படித்தானே! பணிக்கர் முதல்வரான பிறகுதானே, சென்னை ஓவியக்கல்லூரியிலிருந்து இத்தகைய கலைஞர்கள் உருவானார்கள்! பிரகாஷ் சந்திரா போன்ற கலைஞர்களின் தொடர்பு என்னை மனமாற்றத்திற்கு உள்ளாக்கியது! சினிமா பேனர்களில் புதிய உத்திகளை கையாள தொடங்கினேன், என் தந்தையின் எதிர்ப்பை மீறி....புது வண்ண க்கலவைகள், பாரம்பரிய வண்ண பூச்சுகளில் மாற்றம் என்று உருவாக்கியபோது அதற்கும் ரசிகர்கள் உருவானார்கள். வேறு வழியில்லை...தந்தை பச்சை கொடி காட்டினார்! ஓவியக் கண்காட்சிகளிலும் முயற்சித்தேன்....முயற்சி செய்து கொண்டே இருக்கிறேன்!!!

ஓவிய காட்சிகளில் பல வகையான ஓவியங்களை பார்க்கிறேன். என் நண்பர் நெடுஞ்செழியன் எப்போதுமே பரிசோதனை முயற்சிகளில் ஈடுபடுபவர். உத்திகளில் எப்போதும் அதீத ஈடுபாடு. அசுர உழைப்பாளி. முன்னாள் சென்னை ஓவிய கல்லூரி முதல்வர் பாஸ்கரன் பூனைகளை அதிகம் வரைந்தால் இப்போதைய கும்பகோணம் ஓவியக்கல்லூரி முதல்வர் மனோகரனின் ஓவியங்களில் வித விதமான உயிர்ப்புள்ள ஆடுகள் அதிகமாக மேயும் . ரஞ்சித் துணிகளின் சுருக்கத்தில் ஆழ்ந்து விடுவார். சந்தான கிருஷ்ணனுக்கு கதவுகளின் மீது காதல் . புகைப்படங்கள் எடுத்து அதை அப்படியே தத்ரூபமாக வரைவது இளையராஜா போன்ற இளைய ஓவியர்களின் உத்தி! இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்!!!! தாந்திரீக ஓவியங்கள் என்று ஒரு சப்ஜெக்டை எடுத்து கொண்டு அதில் மிதப்பவர்கள் ஒரு வகையினர். தஞ்சாவூர் ஓவியர்கள், கண்ணாடி ஓவியர்கள், மண்கூஜா ஓவியர்களை எல்லாம் நான் இதில் சேர்க்கவில்லை!!!
Installations என்று ஒரு வகை...ஓவிய அறையின் ஒரு பகுதியை தரை முதல் குறிப்பிட்ட அளவு வரை பொருட்களை வைத்து நிறைக்கும் ஒரு கலை என்று நான் சொன்னால் கொச்சையாக இருக்கும். ஒரு முறை ஒரு ஓவியர் தரையில் பெரிய கான்வாசை விரித்து வைத்து அதில் குழைய குழைய விலை உயர்ந்த வண்ணங்களை பூசி அதன் மேல் உள்ளாடை மட்டும் அணிந்து யோகாசன முத்திரைகள் புரிந்தார்..கான்வாஸின் மீது அவர் கரங்கள், கால்கள், புட்டங்கள் பதிந்த பகுதிகள் ஓவியமாக வெளிப்பட்டன! Newsprint காகிதத்தின் மீது கரியையும் எஞ்சின் ஆயிலையும் குழைத்து பூசி விவான் சுந்தரம் வைத்திருந்த ஓவிய கண்காட்சியையும் பார்த்திருக்கிறேன். நடிகர் சிவகுமார், பழநிசாமியாக இருந்தபோது ஸ்தலத்திலேயே போய் அமர்ந்து வரைந்த ஓவியங்களையும் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.

வடக்கிலிருந்தும் நிறைய ஓவியர்களின் கண்காட்சிகள் இப்போதெல்லாம் காணக்கிடைக்கின்றன. ஓவியங்களை காட்சிக்கு வைப்பதே ஒரு பெரும் வியாபார உத்தியாக கையாண்டு வெற்றி காண்பவர்கள் இருக்கின்றனர். எங்களை போன்றவர்களின் ஓவியங்கள் அதிக பட்சமாக பத்தாயிரம் ரூபாய்க்கு விற்கும் . கஸ்தூரி சீனிவாசன் ஓவிய காலரி போன்ற சேவை மனப்பான்மை மிக்கவர்கள் இருப்பதாலேயே எங்களால் ஓவியங்களை காட்சிக்கு வைக்க முடிகிறது. ஆனால் சென்னை போன்ற நகரங்களில் இன்று தனியார் அரங்கங்கள் இரண்டு வாரத்திற்கு ஒன்றரை லட்சம் அளவிற்கு வாடகையே கொடுக்க வேண்டும் என்ற நிலை. அப்போது ஓவியங்களையும் அதிக விலைக்கு விற்க வேண்டும். உடனே வாங்கி விடுவார்களா என்ன? விலை உயர்ந்த அழைப்பிதழ்கள், காக்டெயில் பார்ட்டிகள், ஓவியரின் இமேஜை உயர்த்தும் உடை அலங்காரங்கள், ஆங்கில பத்திரிக்கை பேட்டிகள், விமர்சனங்கள் என்று பல சாமக்கிரியைகள் உண்டு. நல்ல ஓவியர்களுக்கே இந்த நிலை என்றால் அரை வேக்காடு ஆசாமிகள் எவ்வளவு செலவு செய்ய வேண்டியிருக்கும்..வடக்கு ஓவியர்களின் ஓவியங்கள் பிரம்மாண்டமான அளவில் பெரும்பாலும் வருகின்றன. பல சமயங்களில் தரமும் இருப்பதில்லை . விலையும் லட்சங்களில் ஓடும். அப்படிஎன்றால் யார்தான் இவற்றை விலைக்கு வாங்குகிறார்கள்?

Buyers அனைவரும் ஓவிய ரசனை மிக்கவர்களா? நிச்சயம் சில சதவிகிதத்தினர் உள்ளனர். அவர்கள் ஓவியங்கள் சில ஆயிரங்களில் கிடைத்தால், நண்பர்களுக்கு அன்பளிப்பாக கொடுப்பதற்கும், சொந்த உபயோகத்திற்கும் , தங்கள் நிறுவனங்கள் சார்ந்த கட்டிடங்களில் வைப்பதற்கும் வாங்குவார்கள். லட்சக்கணக்கில் பணம் கொடுத்து வாங்குபவர்கள் யார்? ஓவியங்களை முதலீடாக கருதுபவர்கள்…..
இன்று வாங்கி நாலு வருடம் கழித்து விற்றால் பல மடங்கு போகும் என்று கருதும் வியாபாரிகள். ஒரு உசைன் ஓவியத்தையோ, ஒரு ஆதிமூலம் ஓவியத்தையோ இப்படி வாங்கினால் ஒரு நியாயம் இருக்கும்...ஆனால் இன்று மார்க்கெட்டில் இருக்கும் அனைத்து ஓவியர்களின் படைப்புக்களையும் இப்படி விற்க முடியுமா?
பெரும்பாலும் தரமற்ற ஓவியங்களும் இத்தகைய காட்சிகளில் வைக்கிறார்கள். நான் சமீபத்தில் பார்த்த ஒன்றில் குறைந்த விலையே 75,000ல் ஆரம்பித்து ஐந்தரை லட்சம் வரை விலையிட்டு இருக்கிறார்கள். யானையை குருடர்கள் கண்டது போல ரசிப்பவர்களும் உண்டு. நிர்வாணமாக போன அரசனின் இல்லாத உடையை ரசித்தவர்கள் போல இத்தகைய ஓவியங்களை ரசித்து பாராட்டினால்தான் நமக்கும் ஒரு அங்கீகாரம் கிடைக்கும் என்று பாராட்டி மகிழ்பவர்களும் உண்டு. இத்தகைய களேபரங்களில் ஒரு சில போலி ஓவியர்கள் சத்தமில்லாமல் வறிய ஓவியர்களிடமிருந்து ஓவியங்களை வாங்கி, அதில் தங்கள் கையெழுத்தும் இட்டு காட்சிக்கும் வைத்து விலைக்கும் வைக்கிறார்கள்...புத்திசாலிகள்!
இனி உங்கள் ஏரியாவில் ஓவிய கண்காட்சி நடந்தால் தவறாது சென்று வாருங்கள் நண்பர்களே, குறைந்த விலைக்கு கிடைத்தால் கட்டாயம் ஒரு ஓவியமாவது வாங்கி வையுங்கள்!!!! யார் கண்டது, ஒரு நாள் அது அதிக விலைக்கு போகலாம்!

Saturday, July 3, 2010

தமிழ் படிக்காத தமிழ் எழுத்தாளர்.


எப்படி அவருக்கு அப்படி ஒரு எண்ணம் தோன்றியது? ஒரு சேட்டு பையன் ஆங்கிலம், இந்தி, தமிழ் என்று மூன்று மொழிகளில் பிளந்து கட்டுவதை பார்த்தவுடன் தாளவில்லை. தன் பையனும் அவன் படிக்கும் காண்வென்ட்டில்தான் படிக்கவேண்டும் என்று முடிவு கட்டி, வறுமையிலும் அங்கு சேர்த்துவிட்டார். நானும் அங்கு சேர்ந்து மும்மொழி திட்டம் இல்லாததால் ஆங்கிலமும் இந்தியும் மட்டும் படிக்க தொடங்கினேன். கான்வென்ட் சூழலுக்கு ஒவ்வாத தோற்றம்தான் , ஆனாலும் படிப்பில் சோடையில்லை. தமிழ்மொழி என்னை விடவில்லை. பள்ளிக்கு நடந்து செல்லும்போதே..ஆற அமர சினிமா போஸ்டர்களின் தலைப்பை எழுத்துக்கூட்டி படிக்கத்தொடங்கினேன். அடுத்தது பத்திரிகைகளின் வால் போஸ்டர்கள், ஜனசக்தி, தினத்தந்தி , ஆனந்தவிகடன் என்று புரொமோஷன் கிட்டியது. அம்புலிமாமாவில் விக்ரமாதித்தன் கதை, பரோபகாரி பழனி கதைகள் , கண்ணன் பத்திரிக்கை என்று பயணம் தொடர்ந்தது. ஆறாம் வகுப்பு முதல் குஜராத்திகள் நடத்திய பள்ளிக்கு மாற்றம்.

என் தந்தை கம்யூனிஸ்ட் கொள்கைகளில் பிடிப்புள்ளவராக இருந்ததால் அவர் செல்லும் அனைத்து கூட்டங்களுக்கும் கருத்தரங்கம், பட்டிமன்றம் என்று எங்கே நடந்தாலும் என்னையும் அழைத்து சென்றுவிடுவார். பெரும்பாலும் கலை இலக்கிய பெருமன்றம் நடத்திய நிகழ்ச்சிகள். இப்போதைய்ய கெக்கே பிக்கே பட்டிமன்றங்களை போல இல்லை. பல பிரபலங்களை நேரில் காணும் வாய்ப்பும், அவர்கள் பேசுவதை கேட்கும் வாய்ப்பும் அந்த குழந்தை பருவத்திலேயே கிடைத்தது. ஜீவா, குன்றக்குடி அடிகளார், தா.பாண்டியன், ஜெயகாந்தன், கு.அழகிரிசாமி என்று சொல்லிக்கொண்டே போகலாம். நியூ சென்சுரி நிறுவனத்தின் மலிவுப்பதிப்பு குழந்தை நூல்கள் அத்தனையும் என் வசம் இருந்தன. படிக்கும் பழக்கம் தொற்றிக் கொண்டது. ஆங்கில, இந்தி புத்தகங்களுடன் , தமிழ் காமிக்ஸ், குமுதம் என்று பல பட்டறையாக உருவானேன்.

புதிய பள்ளியில் எனக்கு நெருக்கமானவர் யாரென்று யூகித்து இருப்பீர்கள்! நூலகர்தான். ஒன்பதேகால் மணிக்கு தொடங்கும் பள்ளியில் தனியாளாக எட்டு மணிக்கே இந்த ஜீவன் காத்துக்கிடக்கும். லொங்கு லொங்கென்று சிங்கானல்லூரிலிருந்து வடகோவைக்கு சைக்கிளை மிதித்து வருவார் அந்த நல்ல மனிதர். 'ஏண்டா, காலையிலேயே உயிரை வாங்குறே' என்று செல்லமாக திட்டிவிட்டு கதவை திறந்துவிடுவார். அவ்வளவுதான், மாத, வார பத்திரிகைகள் முதல் கிடைத்த புத்தகங்களை எல்லாம் பள்ளி மணி அடிக்கும் வரை கரைத்துக்குடிப்பது என் அன்றாட வேலை. இந்தி மாணவனாக இருந்தாலும் என் ஆர்வத்தை கண்டு தமிழாசிரியர்களே வியந்து போயினர். அவர்களே படிக்காத நாவல்களை , நீல பத்மநாபன் எழுதிய 'தலைமுறைகள்', கே.பி.கேசவதேவ், எம்.டி.வாசுதேவன் நாயர் மொழிபெயர்ப்புக்கள் என்று நூலகத்தில் அனாதையாக கிடந்த புத்தகங்கள் என்று அத்தனையையும் வெறியுடன் படிக்க ஆரம்பித்துவிட்டேன். இந்தியிலும் சோடை போகவில்லை. உச்சரிப்புக்காகவே இந்தி நாடகத்தில் ஒரு சாமியார் வேடத்தில் நடிக்க வைக்கப்பட்டேன்.
சினிமா பைத்தியம் என்னை பீடிக்க ஆரம்பித்ததும் பள்ளி நாட்களில்தான். பள்ளிக்கு அந்த பக்கம் சென்ட்ரல் தியேட்டர், இந்த பக்கம் ஸ்ரீனிவாஸ் தியேட்டர்...ஸ்டில்களையும் போஸ்டர்களையும் வெறித்து பார்த்துக்கொண்டிருப்பது பெரும் பொழுதுபோக்கு. வீட்டுக்கு பக்கத்திலேயே தென்னகத்தின் முதல் தியேட்டராக உருவெடுத்து வெரைட்டி ஹால் என்ற பெயரிலிருந்து டிலைட் என்ற பெயரில் இயங்கிய இந்திப்பட தியேட்டர். மேலும் என் தந்தையின் தொழிலே திரைப்படங்களுக்கு பேனர் வரைவதுதான் என்னும்போது கேட்கவா வேண்டும்...அயல்மொழித்திரைப்படங்களின் பைத்தியம் ஆனேன். ஸ்கிரீன், பிலிம்பேர் பத்திரிகைகளை கரைத்து குடித்து வரப்போகும் படங்களின் கதை, நடிகர்கள் என்று நிரல் நுனித் தகவல்களுடன் நடமாடினேன்.

டிலைட் தியேட்டர் முதலாளி அப்போது ராம் சொரூப் சேட்டு. இந்தி திரைப்பட உலகின் பெரும் புள்ளிகளுடன் நெருக்கமானவர். ஓவ்வொரு வாரமும் இந்திப்படங்கள் மாறும். பம்பாயிலிருந்து போட்டோ கார்டுகள் வந்துவிட்டால் தியேட்டரிலிருந்து என் தந்தையை அழைக்க ஆள் வரும். சில சமயம் என்னை அனுப்பிவிடுவார். அலுவலக அறையில் மேஜை நாற்காலி இருந்தாலும், சேட் தரையில் ஒரு பெரிய மெத்தை விரித்து , திண்டுகள் சகிதம் படுத்துக்கொண்டிருப்பார். புகைப்படங்களை கொடுத்து யாரை பெரிதாக வரையவேண்டும்...யாரை வரையத்தேவை இல்லை என்றெல்லாம் உத்தரவிடுவார். அவர் சொன்னதை இந்த அதிகபிரசங்கி கேட்டதேயில்லை. எனக்குத்தான் அந்த படங்களின் கதை தெரியுமே. அவர் சொன்னதை மறுத்து..இந்த நடிகருக்குத்தான் கதையில் முக்கியத்துவம்...ஆகவே அவரைத்தான் பெரிதாக போடவேண்டும், இதில் நாயகிக்குத்தான் நல்ல பெயர்..அவரை பெரிதாக வரையலாம் என்று விளக்குவேன். சேட்டுக்கு எப்போதும் இது ஒரு ஆச்சரியம். ஒன்று..அவரை யாரும் மறுத்து பேசுவதில்லை. இரண்டு இந்த கருப்பு நிற பொடியன் இந்தி படங்களை பற்றி இவ்வளவு தெரிந்திருக்கின்றானே என்று.

அவருக்கு என் மீது தாளா அன்பு பிறந்துவிட்டது. பிரத்தியேகமான வண்ண இந்தி திரைப்பட பாட்டு புத்தகங்களை ஒவ்வொரு பட ரிலீசின்போதும் என்னை அழைத்து கொடுப்பார். என் தந்தையை அங்கு வரக்கூடாது என்று உத்தரவிட்டு விட்டார். 'இனிமேல் ஆர்டர் வாங்க அவன்தான் வரவேண்டும்' என்று உத்தரவு. ' அவன் காலேஜ் முடிக்கட்டும், பம்பாயில் ராஜ்கபூரிடம் அசிஸ்டென்ட் டைரக்டராக சேர்த்துவிடுகிறேன்' என்று வேறு யாரும் கேட்காமலேயே வாக்களித்துவிட்டார். என் தந்தைக்கு பிடித்தது கிலி. பின்னே கலெக்டராக வரவேண்டிய மகன் சினிமா இயக்குனராவதா என்று பயந்து எம்.ஏ.படிக்க சென்னைக்கு துரத்திவிட்டுவிட்டார். இப்படி சினிமா ஆசை மொட்டிலேயே கருக, சென்னை புதிய வாசல்களை திறந்துவிட்டது. காவலாளியே இல்லாத விக்டோரியா விடுதி வாசம், ஏராளமான நண்பர்கள், தினமும் திரைப்படங்கள், படிக்க நிறைய நூல்கள், நூலகங்கள், இலக்கிய கூட்டங்கள் என்று படிக்க போன அரசியல் அறிவியலை தவிர ஏகப்பட்ட வேலைகளில் மூழ்கி தெளிந்தேன்.

கோவைக்கு ஒரு அரைகுறை சினிமா அறிஞனாக மீண்டு வந்தேன். திரைப்பட ஆர்வலர்களின் ஜோதியில் கலந்தேன். அப்போது அங்கு பணியில் இருந்த அம்ஷன்குமார், அமரநாதன், ஞானி, புவியரசு, கவிஞர் சுகுமாரன் போன்றோர் அமைத்த திரைப்பட சங்கங்களில் ஆர்வத்துடன் பங்கெடுத்து மெருகேறினேன்(!)

உச்சகட்டமாக ஒரு இலக்கிய கூட்டத்தில் நான் திரைப்படங்களை பற்றி பேசியதை கேள்விப்பட்ட நண்பர் மரபின் மைந்தன் முத்தையா அப்போது ஆரம்பிக்க இருந்த 'ரசனை' மாத இதழில் மாதம் ஒரு கட்டுரை எழுதச்சொன்னார். தமிழ் படிக்காத நான் எப்படி எழுதுவது என்று யோசித்துக்கொண்டிருந்தபோது நண்பர்கள் ஊக்குவித்தனர். அப்போது ஆரம்பித்து இன்னும் ஐந்து வருடங்களாக எழுதிக்கொண்டே இருக்கிறேன். முத்தையாவின் அடுத்த ஊக்குவிப்பில் கட்டுரைகள் ஒரு நூலாகவும் வந்துவிட்டது, 'திரைச்சீலை' என்ற பெயரில்.

தமிழ் படிக்காமல் தமிழ்நாட்டில் பட்டதாரியாக மட்டுமல்ல, தமிழ் எழுத்தாளராகவும் உருவெடுக்கலாம்!!!!

Tuesday, March 30, 2010

தோல்பாவைகள் இனியும் ஆடும்





பல பழங்கால கலைகளை பற்றி புத்தகங்களில் படித்துத்தான் தெரிந்திருக்கிறோம். நகரச்சூழலில் மட்டுமே வாழ்ந்து வந்ததனால் இழந்தது நிறைய. கணியான் ஆட்டத்தை பள்ளி நாட்களில் எங்கள் ஊர் காளி ஊட்டில்தான் பார்க்க கிடைத்தது. தெருக்கூத்தை நான் முதன் முதலில் பார்த்தது எங்கே என்றால் ஆச்சரியப்படுவீர்கள். எங்கோ கிராமத்தில் அல்ல! சென்னை புரசைவாக்கம் மில்லர்ஸ் ரோடு பவர் மேன்ஷன் வாசலில் இருந்த பேருந்து நிழற்குடையின் கீழ்தான்!! கதகளி ஆட்டத்தை கோவை நகரத்து ஆயுர்வேத நிலையம் ஒன்றில்தான் கோவை ஞானியுடன் பார்த்தேன். இப்படி போய்க்கொண்டிருக்கும் எனது வறண்ட வாழ்க்கையில் சமீபத்தில்தான் முதன் முறையாக தோல்பாவைக்கூத்து என்ற அற்புதக்கலையை நேரில் காணும் பாக்கியம் கிடைத்தது. அ.கா.பெருமாள் போன்ற அறிஞர்கள் எழுதிய கட்டுரைகள் மூலம் இன்னும் சில கலைஞர்கள் குமரி மாவட்டத்தில் வசித்து வருவதாக அறிந்திருக்கிறேன். அங்கிருந்தே கோவைக்கு வந்து ஒரு கலைஞர் ஒரு நிகழ்ச்சியை நிகழ்த்த இருப்பதாக நண்பர்கள் தட்சிணாமூர்த்தி கல்யாணி தம்பதிகள் மூலம் அறிந்தேன்..

'அட்மாஸ்' கோவை நகரத்தின் ஒரு நவீன காபி ஷாப். சுலபத்தில் கண்டுபிடிக்கமுடியாத ஒரு சிறிய சாலையில் இருக்கிறது. அங்குதான் இந்த கூத்து நிகழ்த்த இருப்பதாக அறிந்தேன். நாம் எப்போதுதான் இத்தகைய இடங்களுக்கு செல்வது! புதிய நண்பர்கள் பாலு, பிரபு சகிதம் சென்றேன். அங்கிருந்த வாடிக்கையாளர்களை கண்டு கொஞ்சம் மிரண்டது உண்மைதான். சக்கரை அதிகமாக ஒரு சாயாவை சாலையிலிருந்தே மாஸ்டரிடம் ஆர்டர் கொடுக்கும் ஆசாமியை பிளாக் பாரஸ்ட் கேக்கை நாசுக்காக சுவைத்துக்கொண்டு நீண்ட கோப்பைகளில் குளிர்பானங்களை வைத்துக்கொண்டு அரட்டை அடித்துக்கொண்டிருக்கும் யுவ யுவதிகள் சபையில் விட்டால் எப்படி இருக்கும்! திறந்த வெளியில் மேசைகளுக்கு நடுவில் வீற்றிருக்கும் மரத்தடி துளசி மாடம் அருகில் கட்டப்பட்டு காத்திருந்தது வெள்ளை திரை!

லக்ஷ்மண ராவ் மிக எளிமையான மனிதராய் காட்சி அளித்தார். பல தலைமுறைக்கு முன் மராட்டிய தேசத்திலிருந்து வந்து இப்போது நாட்டின் கடைகோடியில் இருக்கிறார். ஆர்வத்துடன் தன் கையிலிருந்த கோப்பில் இருந்த சான்றிதழ்களை காட்டினார். பெரும்பாலும் உள்ளூர் கழகங்கள் அளித்தவை.. கசங்கிய தாள்கள்..லேமினேட் செய்ய சொன்னேன். தோவாளைக்கு அருகில் உள்ள சிற்றூரில் வசிக்கிறார். நூறு நாட்கள் வேலைத்திட்டத்திற்கு கூலி வேலைக்கு போகிறார், மனைவி சகிதம்.. கால் வயிற்ருக்கஞ்சிதான் உணவு.. அமரவே மறுக்கிறார். அவரை பற்றி குறிப்புக்கள் வந்த கட்டுரைகளையோ நூல்களையோ கேள்விப்பட்டதேயில்லை என்பது எனக்கு அதிர்ச்சியை கொடுத்தது. கலைமாமணி பட்டத்தை கேள்விப்பட்டிருப்பாரோ என்னவோ! அவருடைய தோல்பாவைகளை அவரே வடிவமைத்து வெட்டி, நீர்வண்ணங்களை வஜ்ஜிரம் போன்ற பொருட்கள் கலந்து பூசி தயாரிக்கிறார். திரைக்கு பின் அவரது மனைவி, மகன், குட்டி மகள் அனைவரும் வாத்தியங்களுடன் தயாராக இருக்கிறார்கள். ராமாயணம் போன்ற நிகழ்வுகள் பல இரவுகள் நடக்குமாம்..இன்று பசுமையை காப்பது குறித்து அவரே எழுதிய நாடகம். ஒலிபெருக்கி இல்லை. முன்னுரைக்கு பின் நிகழ்ச்சி ஆரம்பமாகிறது.

திரையில் விநாயகரின் உருவம் தோன்றிய பிறகு கட்டியங்காரனின் வருகை...லட்சுமண ராவ் என்ற எளிய மனிதன் மாபெரும் கலைஞனாக விஸ்வரூபம் எடுக்கும் நிகழ்வுகளின் ஆரம்பம். வரிசையாக கதாபாத்திரங்கள் தோன்றுகின்றன. மரங்கள், மண்டபங்கள், சோலை வனங்கள் என்று திரையின் ஓரங்களில் காட்சிக்கு ஏற்ப தோன்றி மறைகின்றன. குதிரை மீது மன்னர்கள் வருகின்றனர். கேலிச்சித்திரங்கள் போல தோன்றும் பல வித மனிதர்கள் கூடி பேசுகின்றனர், கேலி செய்கின்றனர், அடித்துக்கொள்கின்றனர். வயிறு வீங்கி பெரிய தொப்புளுடன் கூடிய ஒட்டைப்பல்லன், முன் வழுக்கை விழுந்து பின்னால் காவியேறிய மயிருடன் கூடிய மதினி, பிராமண பாஷை பேசும் அண்ணன் , மரத்தை வெட்டி விற்று திங்க துடிக்கும் தம்பி, ஊர் மக்கள் என்று வித விதமான மனிதர்கள், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகை குரல்கள், பேசும் பாணிகள், தனித்தனியாய் துடிக்கும் உடல் பாகங்கள் , வித விதமான நடனங்கள் , பாடல்கள்....சொல்லிக்கொண்டே போகலாம்.

மெதுவாக எழுந்து திரைக்கு பின் செல்கிறேன். அமர்ந்திருக்கும் ராவின் பரபரக்கும் கைகள் படு வேகமாகவும் சாதுர்யமாகவும் இயங்கிக்கொண்டிருக்கின்றன.ஒரு கை விரல்களில் சிறு அசைவுகள், பிருஷ்டத்தை ஆட்டும் தடியனின் ஆட்ட வேகத்தை துரிதப்படுத்த, அவனுடன் ஜோடி சேர்ந்து ஆடும் பெண்ணின் இயக்கங்களை இன்னொரு கையின் விரல்கள் ஆட்டுவிக்கின்றன. ஆட்டத்திற்கேற்ப ராவின் குரல் வளைகள் வித விதமான் ஓசைகளை பாவத்துடன் ஒலிக்கின்றன. கால் விரல்கள் ஒரு சிறிய கயிற்றை ஒரு கட்டையுடன் இணைத்து அவ்வப்போது ஒரு பெரும் ஒலியை எழுப்பிக்கொண்டிருக்கின்றன. ஒரு தசாவதானியை இப்போதுதான் பார்க்கிறேன். அவர் குடும்பமே டோலக்கை இசைத்துக்கொண்டு பின் பாட்டு பாடிக்கொண்டிருக்கின்றனர்..அவரை சுற்றி தரையில் இறைந்து கிடக்கின்றன...இனி எதிர்காலம் அறியா தோல் பாவைகள்!!!

விளக்குகள் ஒளிர்ந்தன. அந்த கலைஞன் மீண்டும் ஒரு எளிய கிராமவாசியாக மாறி சபைக்கு காட்சியளித்தார். நெகிழ்ந்த நெஞ்சங்களோடு விடை பெற்றோம்...இன்னும் சில நிகழ்ச்சிகளை தட்சிணாவும் யாணியும் 'சிறகுவிரி' சார்பில் ஏற்பாடு செய்யப்போகிறார்கள். அடுத்த நாள் சுமதி நரசிம்மன் வீட்டில் ஒரு நிகழ்ச்சி, பிறகு ஒரு பள்ளியில் நிகழ்ச்சி என்று நம்பிக்கையூட்டும் வார்த்தைகள். 'சிறகுவிரி' நிச்சயமாக இந்த கலைஞனையும் கலையையும் கைவிடாது என்ற நம்பிக்கை ஒளிர்ந்தது ..நாமும் துணை நிற்போம்!!

Friday, March 19, 2010

ரசிகன்!


உலகத்திலேயே நம் தென்னிந்தியாவை போல் சினிமா நடிகர் ரசிகர் மன்றங்கள் இவ்வளவு சுறுசுறுப்பாக செயல்படுகின்றனவா என்று தெரியாது. எவன் நடிக்க ஆரம்பித்தாலும் ஒரு ரசிகர் நற்பணி மன்ற பேனர் ஒன்று அந்த தியேட்டரில் தொங்குகிறது அவன் படத்துடன்..மற்றும் தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் ஆலோசகர் பெயர்களுடன். இப்போது பிளக்ஸ் அச்சிடும் பணியில் ஈடுபட்டு இருக்கும் என்னை போன்றவர்கள் படும் பாடு தனி கதை.இந்த துக்கடா மன்றங்களுக்கு இந்த ஆரம்ப நிலை நடிகர்களே பைனான்ஸ் செய்கிறார்கள். கொஞ்சம் வளர்ந்த நடிகர்கள் என்றால் உடனே பதிவு எண், மன்றக்கொடி போன்ற காமெடிகளுடன்..முதல் நாள் முதல் ஷோ டிக்கெட் அல்லது சிறப்பு காட்சிகளோ உண்டு. பிளாக்கில் விற்பதுதான் இவர்களது முக்கிய சம்பாத்தியம். இப்போதெல்லாம் இவர்களுக்கு போட்டியாக ரோட்டரி சங்கங்கள் போன்ற அமைப்புக்களும் ஈடுபட்டு வருகின்றன.! விஜய், அஜீத், தனுஷ், ஜீவா போன்றவர்களிடம் எதை கண்டு இந்த ரசிகர்கள் மொய்த்து வருகின்றனர் என்றால் புரியவில்லை...சில நடிகர்களை ஜாதி அபிமானத்தோடு கொண்டாடுகின்றனர். தென் மாவட்ட திருமண பிளக்சுகளில் இப்போதெல்லாம் நாடார் வீடென்றால் சரத்குமார், தேவர் என்றால் கார்த்திக், தேவேந்திரர் என்றால் விக்ரம் & பிரசாந்த் (இருவரும் ரத்த உறவுள்ள கசின்ஸ் என்பது நிறைய பேருக்கு தெரியாது) கட்டாயமாக இடம் பெறுகின்றனர். முத்துராமலிங்க தேவரையும் கார்த்திக்கையும் பேனர்களில் ஒன்றாக பார்க்கலாம்!! முதன் முதலில் இங்கு யாருக்கு ரசிகர் மன்றங்கள் அமைந்திருக்கும்? பாகவதர் அபிமானிகளும் சின்னப்பா அபிமானிகளும் இருந்தனர்..ஆனால் மன்றங்கள் இருந்தனவா? ஒரு வேளை எம்ஜியாருக்குத்தான் ஆரம்பித்திருப்பார்களோ! தியோடர் பாஸ்கரன், வெங்கடேஷ் சக்ரவர்த்தி போன்ற ஆய்வாளர்களிடம் கூட விசாரித்தேன். ஒரு முன்னாள் கவுன்சிலரிடம் விசாரித்தபோது அவர் சொன்ன ஓர் தகவல் உபயோகமாக இருந்தது. சாமையர் புது வீதியில் பாகவதருக்கு போர்ட் மாட்டி ஒரு மன்றம் இருந்ததாகவும், பின்னர் டி .ஆர்.மகாலிங்கத்துக்கும் அதே ஏரியாவில் ஒன்று அமைக்கப்பட்டதாகவும் சொன்னார். சிவாஜியும் எம்ஜியாரும் சமகாலங்களில் மன்றம் கண்டவர்கள் என்றும் சொன்னார்.

அப்போது மன்றங்களை ரசிகர்களே அமைத்துக்கொண்டனர். நடிகர்கள் அதற்கு பைனான்ஸ் செய்ததில்லை. ரசிகர் மன்ற காட்சிகள், டிக்கட் வாங்கி பிளாக்கில் விற்பது போன்ற வியாபாரங்கள் நுழைந்தவுடன் அரசியலும் தலைமை பீடங்களும் நுழைந்தன. மன்றங்கள் அரசியல் கட்சிகளின் அங்கங்கள் ஆகவும் ஒட்டு வங்கிகளாகவும் மாறின...குறிப்பாக எம்ஜியார், சிவாஜி மன்றங்கள்! கோவையில் மதுரையை போல் எல்லா நடிகர்களுக்கும் மன்றங்கள் இருந்ததில்லை. ஜெமினி கணேசனுக்கு ஒரு மன்றம் இருந்தது.... பள்ளி சிறுவனாக இருந்தபோதே ரசிகர்களின் செயல்பாடுகளை கவனிப்பேன்..எந்த புதிய படம் வருவதாக இருந்தாலும் ரசிகர்கள் எங்கள் கடையில் திரண்டுவிடுவார்கள்...என் தந்தையிடம் படத்தின் ஸ்டில்களை காட்டும்படி கெஞ்சுவார்கள். காட்டியவுடன்..இதை வரையுங்கள், அதை வரையுங்கள் என்று ஆலோசனை தர ஆரம்பித்துவிடுவார்கள். எனக்கு கடுப்பாக இருக்கும்..அப்படி வந்த 'கவுரவம் சிவாஜி மன்ற மறவர்' வேணு என் வாழ்நாள் நண்பர் ஆகிப்போனார்!

வியட்நாம் வீடு படத்திற்கு வாட்சை விற்று ஒரு வீடு செட்டிங்க்சை வண்டியில் வைத்து ஊர்வலமாகப்போன சேகர், இன்றும் சிவாஜிக்கு பேனர் வைக்கிறார், ஒரு முழுநேர கோவில் அர்ச்சகராக இருந்தும். கணபதி சிவாஜி செல்லக்குட்டி எண்பது 'நவரச' பாடல்கள் அடங்கிய சிவாஜி சிடியை தயாரித்து தெரிந்தவர்களுக்கெல்லாம் கொடுக்கிறார். கோவை மேயர் வெங்கடாசலத்திடம் பேசிக்கொண்டிருந்தபோது சொன்ன செய்தி வியப்பாக இருந்தது. திருவிளையாடல் ரிலீசின்போது சிவன் வேடம் போட்டுக்கொண்டு கழுத்தில் பாம்புடன் ஊர்வலம் போனவர் சாட்சாத் இவர்தானாம்!! இன்னும் இது போல பல பேர். எம்ஜியார் பக்தர்கள் இன்றும் பழைய படங்களுக்கு பேனர் வைத்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடுகிறார்கள். 'உனக்காக நான்' ரிலீசின்போது ஜெமினி ரசிகர்கள் சிவாஜிக்கு இணையாக கட் அவுட் வைக்கவேண்டும் என்று தகராறு செய்தது இன்னும் மறக்க முடியாதது.
யோசித்து பார்க்கும்போது எம்ஜியார் ரசிகர்களாக இருந்தவர்கள் பின்னர் அவரது உதவியால் பெரும் பதவிகளையும் அனுபவித்தனர். சிவாஜி ரசிகர்களுக்கெல்லாம் அவர்களது கட்சியினால் எந்த பிரயோஜனமும் கிடைக்கவில்லை...கோவை குப்புசாமி, ராஜசேகரன் போன்றவர்கள் மட்டும் கொஞ்சம் அதிர்ஷ்டம் செய்தவர்கள்!! ரசிகர்களை வைத்து எம்ஜியார் கட்சி ஆரம்பித்து போன உயரத்தின் கீழ் படியை கூட சிவாஜி ரசிகர் மன்ற கட்சி தொடவில்லை..'என் தமிழ் என் மக்கள் ' என்று ஒரு டப்பா படம் எடுத்ததுதான் மிச்சம்!

நடிகர்களின் முதலமைச்சர் ஆசை இந்த ஜாம்பவான்களிடம் தொடங்கி குஞ்சு குளுவான்களுக்கேல்லாம் பரவி..இன்று ரசிகர் மன்றங்கள் எல்லாம் , தத்தம் தலைவர்களை வருங்கால முதல்வர்களாக கருதி ஆர்ப்பரிக்கின்றன. சமீப காலம் வரை கரை வேட்டிகளுடன் உலவிய விஜயகாந்த் ரசிகர்கள் இன்று சோர்ந்து போயிருக்கின்றனர்.

நான் பார்த்த கேள்விப்பட்ட ரசிகர்கள் பல வகை. கோவை தியாகி குமரன் மார்க்கெட்டில் நான் சிறுவனாக இருக்கும்போது பார்த்த காட்சி இது. அருகருகே இரண்டு வெங்காயக்கடைகள்.ஒன்றின் சுவர் முழுவதும் எம்ஜியார் படங்களின் தினத்தந்தி முழுப்பக்க விளம்பரங்கள் ஒட்டப்பட்டிருக்கும். பக்கத்து கடையில் சிவாஜி விளம்பரங்கள். வாடிக்கையாளர்கள் தத்தம் விருப்ப கடைகளில் வெங்காயம் வாங்கலாம். என் ரொம்ப நாள் சந்தேகம் இரண்டு கடைக்கும் உரிமையாளர் ஒருவர்தானோ என்று!! தங்க பட்டறைகளில் தியாகராஜ பாகவதர் படம் கட்டாயமாக மாட்டப்பட்டிருக்கும். பூதப்பாண்டி ஜீவா சிற்றுண்டி நிலையத்தின் உரிமையாளரான என் சித்தப்பா, கடை முழுவதும் சிவாஜி ஸ்டில்களையும் , காலண்டர்களையும் அலங்கரித்து வைத்திருப்பார் . பாதி நேரம் வாடிக்கையாளர்களான எம்ஜியார் ரசிகர்களுடன் சண்டை நடக்கும். தோசைகளும் ரசவடைகளும் காய்ந்து கிடக்கும். என் மூத்த நண்பர் மறைந்த பேராசிரியர் ஆறுமுகம், தன் நாகர்கோவில் வீட்டில் சிவாஜி நடித்த பெரும்பான்மையான படங்களின் வீடியோ காசட்டுகளையும் 16mm பிரதிகளையும் வைத்திருந்தார். அயல் நாடுகளிலிருந்து சேகரிப்புகள்.. அவர் சொல்வது போல சிவாஜி கத்தியால் உப்புமா கிண்டும் 'மருத நாட்டு வீரன்' போன்ற சில சாதாரண படங்களுக்கு கூட நாலைந்து பிரதிகள்! தன் அபிமான இசை அமைப்பாளர்களின் / பாடகர்களின் இசைத்தட்டுக்களை சேகரித்து வைத்து ரசித்துக்கொண்டிருக்கும் அன்பர்கள்...எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் பரம பக்தர் கோவை ரவி அவருடைய அனைத்து பாடல்களையும் சேகரித்து வைத்திருக்கிறார்! சங்கீத மேதைகளுக்கும், எழுத்தாளர்களுக்கும் பரம ரசிகர்கள் இருக்கிறார்களே. சுஜாதாவை சும்மா பார்க்கவே பெங்களூர் பயணம் செய்த கல்லூரி நண்பர்கள் இருந்திருக்கின்றனர். ஜெயமோகனை கொண்டாடுபவர்கள் இப்போது உண்டு!!

ரசிகர்களை செலுத்துவது எது...அந்த வயதா, இல்லை ஆர்வமா, தன்னை கவர்ந்த ஆளுமை மீதான பற்றா, விடை தெரியாத கேள்விகள்!