Friday, April 8, 2016

அவரவர் நியாயம்

பல கிளைகள் கொண்ட உணவு விடுதி அது. இப்போது தேய்பிறை போல…  இரவு 9 மணிக்கு நான் சென்றபோது யாருமே இல்லை, என்னை தவிர.    ஆர்டர் செய்துவிட்டு காத்திருந்தேன். கேஷியருக்கும் ஒரு மூலையும் மேஜையும் இருந்தன.



30 வயதுக்குள் இருந்த ஒரு பெண் வந்தார். கேஷியரிடம் பார்சல் ஆர்டர் செய்துகொண்டு இருந்தார். மேஜை துடைக்கும் இளைஞன் அந்த பெண் அருகில் சென்று ஏதோ சைகை காட்டி பேச முயன்று கொண்டிருந்தான். பழக்கமானவன் போல என்று நினைத்துக்கொண்டேன். கேஷியரும் இதை கண்டு கொள்ளவில்லை.  என்னிடம் ஆர்டர் எடுத்த இளைஞன் அவனை விரட்ட முயன்றான். 'உள்ளே போடா...' என்று தள்ள முயன்றான். அந்த பெண் முறைத்துக்கொண்டே அந்த கூடத்தின் இன்னொரு மூலையில்  ஒரு நாற்காலியில் சென்று அமர்ந்து கொண்டார். இவன் விர்ரென்று தன் குட்டி வண்டியை தள்ளிக்கொண்டு சென்று அந்த பெண்ணருகே நின்று கொண்டு பல்லிளிக்க ஆரம்பித்தான். பெண் இடம் மாறி இந்த மூலைக்கு ஓடி  வந்து இன்னொரு நாற்காலியில் அமர்ந்து கொண்டு, கேஷியரிடம் முறையிட ஆரம்பித்தார். மீண்டும் அந்த இளைஞன் உள்ளே விரட்டப்பட்டான்.


 'என்ன சார் நடக்குது இங்கே, எனக்கு பயமா இருக்கு...எப்படி இப்படி ஒருத்தனை வேலைக்கு வெச்சிருக்கீங்க, பெண்கள் எப்படி தைரியமா இங்கே வந்து சாப்பிடமுடியும் ? நான் எப்படி இங்கே மறுபடியும் வருவேன்'


 'இல்லைம்மா, அவன் ஒரு டைப்பு ...ஒண்ணும் பண்ணமாட்டான் ...தைரியமா இருங்க...'


 'என்ன சார் இப்படி சாதாரணமா சொல்றீங்க... அவன் என்கிட்டே வரலையே... அந்த அம்மா கிட்டேதானே வம்பு பண்றான்.. விவரமான டைப்பு தான் போல ....' இது நான்.


 உடனே கேஷியர் அந்த பெண்ணிடம் தப்பித்து என்னிடம் பேச முயன்றார்.


 'சார், இலை எடுக்கவும், டேபிள் துடைக்கவும் ஆட்களே இல்லை . மேனேஜ்மெண்ட்ல இவனை வேலைக்கு வெச்சிட்டாங்க. நாங்க என்ன சார் பண்ண முடியும்.'


 'இதென்ன சார் அநியாயமா இருக்கு... போலீஸ்ல கம்ப்ளையின்ட் கொடுத்தா உங்க ஓட்டல் பேர் என்னாகறது'....இது அந்த பெண்.


 ;அது ஒண்ணுமில்லை சார், சின்ன வயசில கஞ்சா ரொம்ப அடிச்சிட்டான், இப்படி ஆயிட்டான். மத்தியானம்தான் வருவான்... இப்ப போயிருவான்...வேலைக்கு ஆள் கிடைக்கலைன்னா நாங்களும் என்னதான் சார் பண்றது...'


 பில் வந்தது. அவரவர்க்கு ஒவ்வொரு நியாயம் இருக்கிறது என்று நினைத்துக்கொண்டே வெளியேறினேன்.

Thursday, January 14, 2016

பொங்கல் வாழ்த்துக்களும் ஒற்றை சீட் காலண்டர்களும்

பொங்கல் வாழ்த்துக்களும் ஒற்றை சீட் காலண்டர்களும் நம் தற்போதைய தலைமுறை அறியாத விஷயங்கள். வருடம் முழுவதும் ஒற்றை சீட் காலண்டரும் பாட்டு புத்தகங்களும் விற்கும் மலர்விழி நிலையம்  டிசம்பர் மாதம் வந்தவுடனேயே மேலும் பிசியாகிவிடும். சிவகாசியிலிருந்து வந்து குவியும் பார்சல்களை பிரித்து அடுக்குவார்கள். அத்தனையும் வித விதமான பொங்கல் வாழ்த்துக்கள் ! வார்னிஷ் மணக்கும் பள பள அட்டைகளில் வண்ணமிகு ஓவியங்கள்! போஸ்ட் கார்டுகளாக ஸ்டாம்ப் ஒட்டி அனுப்பும் வாழ்த்து முதல் கவர்களில் வைக்கும் மடிப்பு வாழ்த்துக்களும், விரிக்கும்போது பல வித வடிவம் எடுக்கும் வாழ்த்துக்களுமாக குவிந்திருக்கும். இரவும் பகலுமாக வேலை. காலண்டர் சீசனும் அப்போது இருப்பதால் அதுவும் கூடவே நடக்கும். கெட்டி அட்டையில் ஒட்டப்பட்டு தின தாள்கள் கொண்ட கேக்குகள் இணைக்கப்பட்ட காலண்டர்கள். பின்னால் மினி பஞ்சாங்கமும் ஓட்டப்பட்டிருக்கும். இத்தகைய காலண்டர்கள் இப்போதும் பழக்கத்தில் இருக்கின்றன.
ஒற்றை சீட் காலண்டர்களில்  பெரும்பாலும் ஒரு பெரிய படமும், நிறுவனத்தின் பெயரும், சும்மா பெயருக்கு  ஒரு குட்டி நாட்காட்டியும்  அச்சிடப்பட்டிருக்கும். பெரும்பாலும் நாட்காட்டியின் அச்சு கலங்கி...ஒன்றுமே தெரியாத அளவில்தான் இருக்கும். கொண்டையராஜ் , ராமலிங்கம், ராஜா போன்ற ஓவியர்கள் வரைந்த விதவிதமான கடவுளர் படங்களும் , பிரபல நடிகர்களின் படங்களும், சில சமயம் அரசியல் தலைவர்களின் படங்களும் இடம்பெற்றிருக்கும்! எம்ஜியார்தான் இந்த காலண்டர்களின் நாயகன். பிறகு ராமராஜன் உச்சத்திலிருக்கும்போது அவரும் ஒரு காலண்டர் நாயகனாக திகழ்ந்தார். நிறுவனங்களில்  காலண்டர் ஆர்டர் எடுக்கும் ஏஜெண்டுகள் கையில் ஒரு பெரிய ஆல்பத்துடன்  ஒரு படையாக இயங்குவார்கள்.
டிசம்பரில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு வரை அந்த வாழ்த்துக்கள் ஓடும். பிறகு பொங்கல் வாழ்த்துக்கள்  சூடு பிடிக்க துவங்கும். இரவும் பகலும் வாடிக்கையாளர்கள், சில்லறை வியாபாரிகள் எனக் களை கட்ட துவங்கும். பொதுவாக, உழவர்கள் சார்ந்த விஷயங்கள், சினிமா நடிகர்கள், என ஓவியங்களும் புகைப்படங்களும் இந்த வாழ்த்துக்களில் இடம் பெறும். கே.மாதவனின் ஓவியங்கள் மிகப்பிரபலமானவை. குட்டி குட்டி கவிதைகள் வாழ்த்தாக அச்சிடப்பட்டிருக்கும்.
எத்தனை பேருக்கு வேலையளித்தன இந்த வாழ்த்துக்கள். என்னிடம் ஒரு பெரும் தொகுப்பே  இருந்தது... காலம் அவற்றை அழித்துவிட்டது!

அந்த காலகட்டத்தில் தபாலில் வாழ்த்துக்கள் அனுப்பாத நபர்களே கிடையாது. அஞ்சல் அலுவலகங்கள் நிரம்பி வழிந்தன. தபால்காரர்கள் பெரும் மூட்டைகளை சுமந்து கொண்டு டெலிவரி செய்து கொண்டிருப்பார்கள்.

கணிணியும் தொழில்நுட்பமும் அழித்தொழித்த  விஷயங்களில் இந்த வாழ்த்துக்களும் இடம் பெற்றன!

Tuesday, January 5, 2016

ஜனவரி 6 சர்வதேச வேட்டி தினமாமே!



நான் 13 வயதிலேயே வேட்டி கட்ட துவங்கிவிட்டேன்.

18 வயது இருக்கும்போது, ஒரு கல்யாணத்திற்கு நாகர்கோவில் கிளம்பினேன். பஸ் பயணம். வேட்டி கட்டிக்கொண்டு கிளம்பிய என்னை பார்த்து என் தந்தைக்கு கடும் கோபம் வந்துவிட்டது. ஒரு பி.ஏ .படிக்கிற  பையன் பேண்ட் போடாமல் வேட்டி கட்டிக்கொண்டு பயணிப்பதா, அதுவும் சொந்த ஊருக்கு என்று கடும் கோபம். வழக்கம்போல அவர் பேச்சை கேட்காமல் புறப்பட்டு சென்று நாகர்கோவிலில் வேட்டியில் சுற்றிக்கொண்டு இருந்தேன்.

கல்லூரிக்கு ஒரே ஒரு நாள் வேட்டி கட்டிக்கொண்டு சென்று, அதை உருவி விட்டு என் நண்பர்கள் செய்த கலாட்டாவினால், பின்னர் அந்த பழக்கம்  தொடரவில்லை.

பின்னர் வேட்டி நெசவுக்கு புகழ் பெற்ற நாகர்கோவில் வடசேரியில் எனக்கு பெண்ணும் பார்த்து அங்கேயே திருமணமும் செய்து வைத்தனர். திருமண மேடையில்  பட்டுவேட்டி கட்டவில்லை... சுயமரியாதை திருமணம். சாதாரண கைத்தறி வேட்டிதான். இன்றுவரை என் இடுப்பில் பட்டு ஏறவில்லை .

எனக்கு லுங்கி பிடிக்காது...பெரும்பாலும் சாயவேட்டியைதான் வீட்டில் உடுத்துவது . நரசிம்மா (மோகன்லால் அந்த  படத்தில் கலர் கலராக வேட்டிகளை உடுத்துவார்) வேட்டி நம்ம பேவரிட்.

சமீப காலங்களில் வேட்டிக்கு அளிக்கப்படும் ஊடக விளம்பரங்கள் என்னை பிரமிக்க வைக்கின்றன. ஜிப், வெல்க்ரோ, பாக்கெட் என்று அசர அடிக்கின்றனர். சமீப காலங்களில் துக்க வீடுகளில் கூட, துணிமணிகள் வழங்கும் சடங்குகளில், பிராண்டட்  வேட்டி பார்சல்களை  பார்க்கிறேன்.


என்னிடமும் கூட ஒரு பிராண்டட் வேட்டி சட்டை இருக்கிறது. என்னுடைய தேசிய விருதுக்கு பிறகு நடந்த பாராட்டு கூட்டங்களில் ஒன்று, கோவை சேம்பர் ஆப் காமர்ஸ் சார்பில் நடைபெற்றபோது , ஒரு நினைவுப்பரிசையும் வழங்கினார்கள். வீட்டில் வந்து பிரித்தபோது இருந்தது ராம்ராஜ் வேட்டியும் சட்டையும்...நான் அப்போது அடைந்த மகிழ்ச்சிக்கு இணையேயில்லை. நிச்சயம் அந்த விலை கொடுத்து வாங்க எனக்கு மனம் வராது!