Monday, November 9, 2015

எழுத்தாளர்கள்

நான் என் வாழ்க்கையில் முதன் முதலாக பார்த்த எழுத்தாளர் ஜெயகாந்தனாகத்த்தான் இருக்கும். அடடா என்னவொரு ஆரம்பம். 

கோவையில் நடந்த கலை இலக்கிய பெருமன்றத்தின் முதல் மாநாட்டிற்கு  என் தந்தை எப்போதும் போல, குட்டிப்பையனான என்னையும் அழைத்துச் சென்றிருந்தார். மாநாட்டிற்கான ஓவியப்பணிகளை அவர்தான் செய்திருந்தார். திடீரென்று மேடைக்கு வந்து நினைவுப்பரிசை பெற்றுச் செல்ல என் தந்தை அழைக்கப்பட்டார்.  மேடையில் மீசையில்லாத  ஜெயகாந்தன் பரிசுக்கோப்பையுடன் காத்திருக்கிறார். கசங்கிய ஆடையுடன் இருந்த என் தந்தைக்கு கூச்சமோ கூச்சம் . எல்லோரும் அவரை உற்சாகப்படுத்தி மேடைக்கு அனுப்புகிறார்கள். தன்  ஆதர்ச எழுத்தாளரிடம் , பெருமையும் வெட்கமும் ஒரு சேர என் தந்தை பரிசு பெற்ற காட்சி இன்றும் நினைவில் இருக்கிறது!

எத்தனையோ எழுத்தாளர்களை பிறகு சந்தித்து பழகியபோதும்...சிலரை பற்றி மட்டும் இங்கே பதிவிடுகிறேன்.

கு.அழகிரிசாமியும், தொ.மு.சி.ரகுநாதனும் என் குழந்தை பருவ நினைவுகளில் வந்து போனவர்கள். மாணவப்பருவத்தில், நண்பராகிப்போன எழுத்தாளர் இரவிச்சந்திரனால், சுஜாதாவின் நட்பு கிடைத்தது. அவரது வீட்டிக்கு சென்று சந்தித்ததும் உண்டு. கோவைக்கு அவர் ஒரு முறை வந்தபோது , நண்பர் மார்ஷல் அவரை என் வீட்டிற்க்கு அழைத்து வந்தார். கூட்டம் கூடிவிடும் என்பதாலேயே, சுஜாதா  காருக்குள்ளேயே இருந்து என்னுடன் பேசிவிட்டு சென்றார். ஒரு முறை பெங்களூரில் இரவிச்சந்திரனுடன், ராஜேந்திரகுமாரை  சந்தித்து, அவரது ஆபீசில் பொய் சொல்லவைத்து சினிமாவுக்கு அழைத்து சென்றோம். பின்னர் எனது நல்ல நண்பராகிப்போன எஸ்.சங்கரநாராயணனை பெங்களூரில்தான் முதன் முதலாக இரவிச்சந்திரனுடன் சந்தித்தேன். மாலனின் அறிமுகமும் திசைகள் நாட்களும் அப்போது ஆரம்பமாயின. பாலகுமாரனையும் சுப்ரமண்ய ராஜூவையும் சந்தித்து பேசக்கூடிய வாய்ப்புகளும் அப்போது கிடைத்தன!

எனது மாணவப்பருவத்தில் கோவையில் நடந்த பல இலக்கிய கூட்டங்களில்  தகழி சிவசங்கரன்பிள்ளை, கடம்மனிட்ட ராமகிருஷ்ணன், அய்யப்ப பணிக்கர், வண்ணநிலவன், பூமணி போன்றவர்களை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.

என் மதிப்புக்குரிய எழுத்தாளர்களான சுந்தர ராமசாமி, நாஞ்சில் நாடன், வண்ணதாசன், கலாப்ரியா, இரா.முருகன் , ஜெயமோகன் அனைவருடனும் நெருங்கிப்பழகும் வாய்ப்புகள் பின்னாளில் உருவாயின .

இந்த வரிசைகளில் சேராத ஒரு எழுத்தாளருடன் பழகும் வாய்ப்பும் எனக்கு கிடைத்திருக்கிறது. அவர்தான் பேய்க்கதை மன்னன் நாஞ்சில் பி.டி .சாமி!
எங்கள் வீட்டுக்கு எதிரில் ஒரு புகழ் பெற்ற கடை இருந்தது. பாட்டு புத்தகங்கள், கேலண்டர்கள், படங்கள் வாங்கவேண்டுமென்றால் இங்குதான் வந்தாகவேண்டும். 'மலர்விழி நிலையத்தில்'தான் பேய்க்கதை மன்னனை சந்தித்தேன். நல்ல உயரம், சுருள் கிராப், ஜெமினி கணேசன் மாதிரி மீசை, கிரீம் கலர்  ஜிப்பா, ஜாலியாக பேசுவார். அவர் அப்போது புனித அந்தோணியார் படத்திற்க்கு வசனம் எழுதியிருந்தார். மலர்விழி நிலையத்தில் கதை புத்தக விறபனையில் கொடுக்கல் வாங்கல் உண்டு. பண வசூலுக்கு அடிக்கடி வருவார். கோவையில் அப்போது பிரபலமாயிருந்த, எனக்கும் நன்கு பழக்கமான 'காதொலி சித்தர்'  சாமிகிரி சித்தர் இவருக்கு நட்பானார். இருவரும் ஒரு திரைப்பட தயாரிப்பில் இறங்கினர். பேய்க்கதை  மன்னர்தான் இயக்குனர்!! படத்தின் பெயர் 'பாடும் பச்சைக்கிளி'. மலர்விழி நிலையத்தின் சவுந்தரம் அண்ணாச்சிக்கு கொஞ்சம் கலைத்தாகம் உண்டு. வடக்கன்குளத்தில் மாதா கோவில் திருவிழா நாடகங்களில் வில்லன் வேடத்தில் நடித்து 'சிம்மக்குரலோன்' என்ற பட்டத்தையும் தனக்கு தானே சூடிக்கொண்டிருந்தவர்!! படத்தில் அவருக்கும் ஒரு நகைச்சுவை வேடம் தரப்பட்டிருந்தது. கேட்டிருந்தால் எனக்கு கூட ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கலாம். கொஞ்ச காலம் இந்த திரைப்பட ஷூட்டிங்  அக்கப்போர் ஓடி, ஒரு கட்டத்தில் நின்றும் போய்விட்டது.

பி.டி .சாமி. அதற்க்கு பிறகு  கொஞ்சம் அமைதியாகிவிட்டு மீண்டும் கதை எழுதுவதில் ஈடுபட்டார்!!



அவர் இறந்து போன செய்தியையும் பின்னர் அறிந்தேன்.!

Saturday, September 26, 2015

ஒரு புதிய வழக்கு

நீண்ட நாட்களுக்கு பிறகுதான் அவரது எண்ணிலிருந்து அழைப்பு வந்தது.

'உங்களை பார்க்க வரணுமே... ஒரு அவசர ஜோலியா பேசணும் ' என்றார்.!!!

அடுத்த நாள் மீண்டும் ஒரு அழைப்பு...உங்க கடை மறந்து போச்சே....இங்கே வெரைட்டி ஹால் ரோடில் நின்னுகிட்டு இருக்கேன்.... 10 தடவைக்கு மேல் வந்தவருக்கு வழி மறந்து போனது ஏன் என்று யோசித்துக்கொண்டே வழி சொன்னான். ஒரு வழியாக வந்து சேர்ந்தார். கூட 40 வயது மதிக்கத்தக்க ஒரு பெண். 100 கிலோமீட்டருக்கு அப்பாலிருந்து வருகிறார்கள்.

வந்தவுடன் நேராக விஷயத்துக்கு வந்துவிட்டார்.

'என்ற மாப்பிள்ளை செத்து ஆறு மாசத்துக்கு மேலே ஆச்சுங்க. தவணகிரி பக்கத்திலே ஒரு கவர்மெண்ட் பேக்டரிலெ நல்ல போஸ்ட்ல இருந்தாரு. பொண்ணு இங்கே ஒறம்பரைக்கு வந்திருந்தா. திடீர்னு ஒரு நைட் போன் வருது...இறந்துட்டாரு...பாடியை நாங்க கொண்டு வரணுமா... நீங்க வந்து வாங்கிட்டு போறீங்களான்னு....எனக்கு கையும் காலும் ஓடலே . நீங்களே கொண்டு வாங்கன்னு சொல்லிட்டேன். எப்படி செத்தாரு. ஏன் செத்தாருன்னு ஒண்ணுமே யோசிக்க முடியல. அவங்க ஆபீஸ்லே இருந்து ரெண்டு பேரு வந்து பாடியையும், ஹார்ட் அட்டாக்னு சொல்லி மெடிக்கல் ரிப்போர்ட்டையும் கொடுத்திட்டு போனாங்க. அடுத்த நாளு அடக்கம் பண்ணிட்டோம். அப்படியே அடப்பு , சாங்கியம்னு நாளு போயிருச்சு... இப்ப எட்டு மாசம் ஆச்சுங்க'.

சரி....இப்ப என்ன பிரச்சினை. பேக்டரிலெ இருந்து பணம் வரலையா?

அதெல்லாம் இல்லீங்க... இப்ப எங்களுக்கு ஒரு பெருத்த சந்தேகம் வந்திருக்கு. அவரு யோகா, எக்சர்சைஸ் எல்லாம் பண்ணி பாடியை டிரிம்மா வெச்சிருந்தார். அப்படி சாகற ஆளும் இல்லே. அதுதான்......

ஓ ...சின்ன வயசு வேறே....

 வயசு 63 ஆச்சுங்க....பாத்தா தெரியாது...

என்னது? 63ஆ?...இவருக்கே 70 கூட ஆயிருக்காதே என்று மனதுக்குள் ஒரு கேள்விக்குறி.

ஆமாங்க..ரிட்டயர் ஆனதுக்கு அப்புறம் ஏதோ ஒரு உத்தரவு கிடைச்சு அவரை அங்கே வேலைக்கு வெச்சிருந்தாங்க... ரொம்ப திறமையானவர்..

சரி..இப்ப என்ன பண்ணலாம்னு இருக்கீங்க?

அவரை யாரோ கொண்ணுருக்கணும் ..அப்படி சாகற ஆள் இல்லீங்க.

இங்கே பாருங்க... இப்ப நீங்க புகார் கொடுத்தாலும் யாரும் கண்டுக்க போறதில்லை... எட்டு மாசமா என்ன செஞ்சிகிட்டு இருந்தீங்கன்னு போலீஸ்ல கேப்பாங்க....இந்த அடைப்பு எல்லாம் யாரும் ஒத்துக்க போறதில்லை. அப்புறம் உங்களுக்கு யார் மேலெ சந்தேகம்?

அவருக்கு ரெண்டு வருஷம் முன்னாலே ரெண்டு பேர் ரிட்டயர் ஆயிருக்காங்க. அவங்களுக்கு இந்த புது வேலைக்கு ஸ்பெஷல் பர்மிஷன் கிடைக்கல. அந்த பொறாமைல இன்னொரு ஆளையும் சேர்த்து வெச்சுகிட்டு இவருக்கு விஷம் வெச்சுட்டாங்க.

அவங்க இவரை விட வயசானவங்கன்னு தெரியுது....இதுக்காக கொலை எல்லாம் செய்வாங்களா ?அவங்க பெயர், அட்ரஸ் எல்லாம் தெரியுமா?

 தெரியாதுங்க.. பின்னே எப்படி அப்படி அடிச்சு சொல்றீங்க?

அவரே சொன்னாருங்க..

 யாரு?

எங்க வீட்டுக்காரர்தாங்க.....முதன் முதலாய் அந்த பெண் பேசினாள்.

இவனுக்கு ஒன்றும் புரியவில்லை.... எப்படிங்க?

அது நாங்க சாமிகிட்டே பேசினோம்....அவரும் ஆவியா வந்து சொன்னாரு. விஷம் வெச்சு அப்புறம் அடி அடின்னு அடிச்சு கொன்னாங்களாம். ஆனா அவரும் சாதாரணப்பட்ட ஆள் இல்லீங்க... மூணு பேர்ல ஒருத்தனை அவரே தீத்துக்கட்டிட்டாரு ! பேக்டரிலெ கோடவுன் எரிஞ்சு அந்த ஆள் செத்துப் போயிட்டான். கேசை நடத்துங்க... நான் வந்து கோர்ட்டில் சாட்சி சொல்றேன்னு சொல்லிட்டாரு.

அதெப்படிம்மா சாத்தியம்?

அதெல்லாம் அவரு எப்படியாவது செய்வாருங்க…

நீ சும்மா இரும்மா...சாருக்கு இதிலே எல்லாம் நம்பிக்கை கிடையாது.

இங்கே பாருங்கம்மா... நம்பிக்கை... நம்பிக்கை இல்லைங்கிறதை எல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம். நான் சொல்றதை பொறுமையா கேளுங்க. உங்க அப்பா எனக்கு அண்ணன் மாதிரி...ரொம்ப வருஷ பழக்கம். உங்க நல்லதுக்குதான் சொல்றேன். இப்படியெல்லாம் சந்தேகம் வந்திருந்தா அப்பவே நீங்க போலீஸ்ல சொல்லியிருக்கணும்.. இப்ப ஆயிரம் கேள்வி வரும். அப்பவேன்னா தோண்டி எடுத்து பார்த்திருப்பாங்க. இப்ப எட்டு மாசம் கழிச்சு அங்கே என்ன இருக்க போகுது. அவ்வளவு அக்கறையா போலீசு இதையெல்லாம் இவ்வளவு நாளைக்கு அப்புறம் விசாரிப்பாங்கன்னு தோணலை. உங்களுக்கு குழந்தைங்க எத்தனை? அவங்களை படிக்க வைக்கிற வேலையை பாருங்க.

எனக்கு ஒரே பையந்தானுங்க... +2 படிக்கிறான். சார். .

அப்ப எனக்கும் ஒண்ணும் புரியல்ல, இவளுக்கும் விவரம் பத்துல . சொந்தக்காரங்க ரெண்டு கான்ஸ்டபிளும் இருக்காங்க... ஒருத்தனும் ஒண்ணும் சொல்லலை. இப்ப ரெண்டுல ஒண்ணு பாக்கனும்னு இவ சொல்றா. நான்தான் கொஞ்சம் பொறுன்னு சொல்லி உங்க கிட்டே இப்ப கூட்டிட்டு வந்திருக்கேன். சிபிஐ ல புகார் கொடுக்கலாமா?

அதெல்லாம் சினிமால...இங்கே பாருங்கம்மா..இதில இறங்குனீங்கன்னா லட்ச லட்சமா நிறைய செலவாகும், நிறைய அவமானம் காத்திருக்கும்...ஊரு விட்டு ஊரு ஒவ்வொரு வாய்தாவுக்கும் அலையணும். நான் சொல்றதை சொல்லிட்டேன்..பையனை நல்லா படிக்க வையுங்க...அப்புறம் மத்ததை பார்க்கலாம்.

அந்த பெண் ஒன்றும் கேட்பதாக தெரியவில்லை. பெரியவர் வழிக்கு வந்துவிட்டார்.

பாரும்மா...சார் சொல்றதுதான் சரி....எனக்கும் வயசாச்சு...அலையவும் முடியாது . சொல்றதை கேளு...

இவனுக்கும் ஒன்றும் புரியவில்லை....சரி இதுக்கு ஒரு முத்தாய்ப்பு வைத்தாகணும்.

'சரிம்மா....நான் ஒரு யோசனை சொல்றேன். 'மறுபடியும் சாமிகிட்டே பேசுங்க. உங்க வீட்டுக்காரர் கிட்டே சொல்லுங்க. இப்படி தெரிஞ்ச வக்கீல்கிட்டே போய் சொன்னோம். அவரு இப்படி சொன்னாரு...அலைய வேண்டாம்னு சொல்றாரு. நீங்க என்ன சொல்றீங்க... அப்படி பழி வாங்கியே தீரணும்னா ... இறங்குறொம்னு சொல்லுங்க. அவரு என்ன சொல்றாரோ அது படி நடக்கலாம். என்னாலே இந்த கேஸ் நடத்த முடியாது...நான் இப்பல்லாம் கோர்ட்டுக்கு போறதில்லை. உங்களுக்கு வேணும்னா எனக்கு தெரிஞ்ச வக்கீல் யாரையாவது ஏற்பாடு பண்ணித்தரேன்...'

 உங்க வீட்டுக்காரர் என்ன சொன்னார்னு எனக்கு போன்ல சொல்லுங்க....

 இப்போதுதான் அந்த பெண்ணின் முகத்தில் ஒரு தெளிவு பிறந்தது. பெரியவரும் ஆசுவாசம் அடைந்தார்.

சரி வர்றோம் சார்....ரொம்ப நல்லது'

விடை பெற்றனர்.

ஐந்து நிமிடம் போயிருக்கும்...நாற்காலி மீது ஒரு பை இருந்தது. மறந்து போயிருப்பார் போல. அவரது எண்ணை அழுத்தினான். 'இந்த எண் உபயோகத்தில் இல்லை' என்ற அறிவிப்பு.

பையை திறந்து பார்த்தான். ஒரு கட்டு அச்சடிக்கப்பட்ட தபால் கார்டுகள்.

படித்தான்...'உத்தரகிரியை பத்திரிகை' என்ற நீத்தார் சடங்கு அறிவிப்பு. கொட்டை  எழுத்தில் கருப்பு நிறத்தில்  மாசிலாமணி என்ற பெயரும்....இப்போது வந்து போனவரின் புகைப்படமும்.

என்னமோ செய்வது போல ஒரு உணர்ச்சி...நாற்காலியை இறுக பற்றிக்கொள்ளவேண்டியிருந்தது.